ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து தற்போது தேர்தல் வன்முறைகள் நாடெங்கும் பரவத் தொடங்கியுள்ளன.
இதன் முதலாவது வன்முறை களுத்துறை மக்கோன சந்தியில் பதிவாகியுள்ளது. இங்கு இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பேருவளை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் உறுப்பினர் படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் சமில ரணசிங்க என்பவரே காயமடைந்தவராவார். இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.
இதேவேளை, நேற்று மாலை குருணாகல் மாவத்தகம பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். பல வாகனங்களுக்கும் சேதமேற்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் மாவத்தகம பிரதேச சபைத் தவிசாளரின் வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே பொலன்னறுவை மாவட்டத்தில் நாமலின் குண்டர் படைத் தளபதி ரொஷான் தலைமையிலான குழுவினர் மைத்திரிபாலவுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஐ.தே.க.வினரை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.