ஆர். சம்பந்தனின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த குழுவினர் இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளனர்.
இன்று பகல் 12 மணி முதல் ஒரு மணி 30 நிமிடம் வரையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
இந்த சந்திப்பு தொடர்பான விபரங்களுடன் இணைந்து கொள்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்
இந்த சந்திப்பின் போது, தேசிய பிரச்சனை தீர்வு குறித்து ஆராய குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்ததாக சுமந்திரன் குறிப்பிட்டார்.
இதேவேளை சுன்னாகத்தில் மின்சார உற்பத்திற்கு பயன்படுத்தப்படும் கழிவு எண்ணெய் நிலத்திற்குள் செலுத்தப்படுவதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இதனால் பல கிராமங்களுக்கான குடிநீருக்கு பாதிப்பு ஏற்படுகின்றமையும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நல்லிணக்க அடிப்படையில் வடக்கு மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை ஆளுனராக நியமிப்பது குறித்து ஆலோசிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதன் போது கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களுக்கு பொது மன்னிப்பை வழங்குவது குறித்து ஆராயுமாறும் கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டனர்.
இதன்போது கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறித்த பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சரவைக்குள் அங்கம் வகிப்பது சிறந்தது என சுட்டிக்காட்டினார்.
எனினும், அதற்கு பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், 1977 ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும் இவ்வாறான ஒரு கோரிக்கையை முன்வைத்த போதும் தாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு சுமூகமான நிலையொன்று ஏற்படுத்தப்படும் போது அமைச்சரவைக்குள் இடம்பெறுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராயும் என்று சம்பந்தன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு-2
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத் தரப்புக்குமிடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஜனாதிபதித் தேர்தலின் போது வடகிழக்கு மக்கள் தமக்கு வாக்களித்தமைக்காக முதலில் மிக்க நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கூறினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த இரா. சம்பந்தன் அவர்கள், தமது பிரச்சினைகளுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் தங்கள் வாக்குகளை தங்களுக்கு அளித்துள்ளார்கள் என்றார்.
அத்துடன் இதுவரை காலமும் நாங்கள் மகிந்த ராஜபக்ச அவர்களின் அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். ஆயினும் அவர்கள் எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதன்படி, இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியமர அனுமதிக்க வேண்டும்.
நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின்கீழ் விடுதலை செய்யவேண்டும்.
காணாமற்போனவர்கள் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடகிழக்கு ஆளுநர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் மாகாண அமைச்சின் செயலர்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது.
அத்துடன் ஒரு நல்லிணக்க சமிக்ஞையாக முதலில் வடக்கிற்காவது தமிழ் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்றும், வவுனியா மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்களை மாற்றுவது தொடர்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், திருகோணமலையில் எட்டு வருட காலமாக இராணுவ அதிகாரி ஒருவர் அரச அதிபராக இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மற்றும் சுன்னாகம் மின்சார சபையினால் ஏற்பட்டிருக்கும் கழிவுஎண்ணெய் கசிவானது பல கிராமங்களை பாதித்திருப்பதுடன் அது வடக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, இதனால் மேலும் பல கிராமங்களும் பாதிக்கப்பட்டு வருவதும், குடிநீர் கெட்டுப்போய், குளிப்பதற்குக் கூட பயன்படுத்த முடியாத நிலைமையிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்கப்பட்டது.
அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கான பாஸ்நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. அத்துடன் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு காலக்கிரமத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு அரச தரப்பினர் பதிலளிக்கையில்,
இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினை தொடர்பில் குழுவொன்றை அமைத்து இடங்களை இனங்கண்டு அவர்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விபரங்கள் திரட்டப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆளுநர்களை மாற்றுவதைப் பொறுத்தமட்டில் ஒன்பது ஆளுநர்களையும் மாற்றுவதற்கு உத்தேசித்துள்ளோம்.
ஆகவே ஆளுநர்கள் மாற்றத்தின் போது இந்த விடயமும் கவனத்திற் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்கள் மாற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்.
வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான பாஸ் நடைமுறையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் குழுவொன்றை நியமித்து அதனூடாக அவ்விடயம் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வ கட்சி அரசாங்கத்தினை ஸ்தாபிக்க ஒத்துழைப்பை கோருகின்றார் ஜனாதிபதி மைத்திரி.
தேசிய அரசு அமைய அனைவரும் ஒன்றிணையுங்கள்;மைத்திரி அழைப்பு
தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கண்டி எண்கோண மண்டபத்திலிருந்து அவர் நாட்டுமக்களுக்கு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டின் ஜனாதிபதியாக என்னை தெரிவு செய்த அனைத்து மக்களுக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
இந்த நாட்டிலிருக்கின்ற அனைவரும் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் பெளத்தர்கள் என்ற இனமத பேதங்கள் பாராது அனைத்து மக்களும் ஒன்றிணைந்து சகோதரத்துவமாக இந்த நாட்டில் வாழ வேண்டும்.
எமது நாட்டை பொறுத்த வரையில் பொருளாதாரத்தை அதிகமாக ஈட்டித் தரும் துறையாக விவசாயம் காணப்படுகிறது. எனவே எனது நூறு நாள் வேலைத் திட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக நவீன தொழில் நுட்ப வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
அத்துடன் சாதாரண மக்களின் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் பக்கச்சார்பற்ற பொலிஸ் திணைக்களத்தை உருவாக்குவதன் மூலம் சட்ட ஒழுங்கை நிலை நாட்டி இலஞ்சம், ஊழல் மற்றும் தேவையற்ற செயற்பாடுகள் இல்லாது நாட்டை சமாதான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும். அதற்கான நடவடிக்கையில் எமது அரசு ஈடுபடும்.
சர்வதேசத்திலும், தேசிய ரீதியிலும் இணக்கப்பாட்டை கட்டி எழுப்பி நல்லுறவை பேணுவது எமது தலையாய கடமையாகும் எனவே நாட்டு மக்கள் அனைவரும் மனிதாபிமானத்துடனும் சகோதரத்துடனும் ஒன்றிணைந்து தேசிய அரசினை உருவாக்குவதற்கு அனைத்து கட்சிகளும் எம்முடன் ஒன்றிணைய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
எனது முதலாவதும் இறுதியுமான தேர்தல் இது. இந்த தேசத்திற்கு தேவையானவர் அரசன் அல்ல மாறாக நல்ல ஒரு மனிதனே என அவர் தனது கன்னி உரையில் குறிப்பிட்டுள்ளார்.