டாஸ்மேனியா காடுகளை உலக பாரம்பரிய தளத்திலிருந்து விலக்கக்கோரி ஆஸ்திரேலியர்கள் ஆர்ப்பாட்டம்

468
ஆஸ்திரேலியாவில் முந்தைய ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த தொழிற்சங்க கட்சியின் கோரிக்கைபடி டாஸ்மேனியாவில் உள்ள 1,20,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகள் உலக பாரம்பரியத் தளங்களில் இணைக்கப்பட்டது. நாளை தோஹாவில் வருடாந்திர உலக பாரம்பரிய குழுவின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முன்பு இணைக்கப்பட்ட டாஸ்மேனியா காடுகளில் 74,000 ஹெக்டேர் காடுகளுக்கு விலக்கு அளித்து அந்தப் பகுதியை மரத் தொழிலுக்குத் திறந்துவிடுமாறு 5000க்கும் மேற்பட்டோர் டாஸ்மேனியாவின் தலைநகரான ஹோபார்ட்டில் உள்ள பாராளுமன்றத்தின் எதிரே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள மரங்கள் ஆதிகாலத்தவை அல்ல என்று குறிப்பிட்ட அவர்கள், இதனால் தங்களின் தொழிலுக்கு இந்த மரங்கள் உதவட்டும் என்று வாதிட்டனர்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மரத்தொழிலில் ஆண்டுதோறும் அந்நாட்டு பணமதிப்பில் 22 பில்லியன் டாலர் வருமானம் பெறப்படுகின்றது. இதில் 8 பில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பாக மாறுகின்றது. மேலும் 66,000 பேர் இந்தத் தொழிலினால் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். ஒரு அரசாங்கமாகவும், மக்களின் கூட்டணியாகவும் தாங்கள் பாரம்பரியத்தளங்கள் என்ற பெயரில் மேலும் காடுகள் அடைபட்டுப் போவதை விரும்பவில்லை என்று பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.

புதிய அரசு குறிப்பிடும் பகுதிகளில் 8.6 சதவிகிதம் தவிர மற்றவை பாரம்பரிய மழைக்காடுகள் என்று கூறும் காடுகள் பராமரிப்பு சமூகத்தின் தலைவர் விகா பெய்லி, ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுதிகளை விலக்கிக் கொள்ளுமாறு அபோட் வலியுறுத்துவதன் மூலம் உலக பாரம்பரியம் என்ற கருத்தையே எதிர்க்கின்றார் என்று குறிப்பிடுகின்றார்.

கடந்த டிசம்பரில் நிலக்கரி துறைமுக விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் கழிவுகளை பவளப் பாறைகளுக்கு அருகில் கொட்டி அரசு சமன்படுத்துவதால் யுனெஸ்கோ அந்தப் பகுதியையே அபாயம் உள்ள பாரம்பரியத்தளமாக அறிவிப்பது குறித்து யோசித்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது நடைபெற்றுவரும் புதிய ஆர்ப்பாட்டம் குறித்தும் நாளைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

SHARE