தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளில் மிகத் தெளிவாக அந்த இலக்கை நோக்கி நகர்கின்ற ஒரு மையமாகவே மாகாண சபையை முன்னெடுக்கின்றோம் இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்

378

 

 

தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளில் மிகத் தெளிவாக அந்த இலக்கை நோக்கி நகர்கின்ற ஒரு மையமாகவே மாகாண சபையை முன்னெடுக்கின்றோம் இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம். கடந்த சனிக்கிழமை நல்லூர் சங்கிலியன் மன்றக் கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் – எங்களுடைய மண், இது வரலாற்று மண் ஈழத்தமிழர் வரலாற்றில் யாழ்ப்பாண இராச்சியம் பெருமையுடையதாகப் பேசப்படுகின்றது. இன்றும் பேசப்படுகின்றது.

யாழ்ப்பாண இராச்சியத்தியத்தின் மையமாக, ஆட்சிநிலமாக அரண்மைனை நிலமாக சங்கிலித் தோப்பு விளங்குகின்றது. அந்தப் பகுதியில் வாழ்கின்றவன் என்பதல் நான் பெருமையடைகின்றேன். இந்த நிகழ்வு அந்த சங்கியன்தோப்பில் இருந்து ஆரம்பித்துள்ளது என்பதையிட்டு நான் மகிழ்வடைகின்றேன். தமிழர்கள் வரலாற்றில் கடந்த 65 வருடங்களாக இந்த நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்த சிங்கள இனவாதிகளால் புறக்கணிக்கப்படுகின்றோம் என்ற உணர்வோடு எங்களது அரசியல் நகர்கின்றது.

இன்றும் அதுவே உள்ளது. நாங்கள் இதுவரை ஒரு எதிர்ப்பு அரசியலை செய்து வந்தவர்கள் அந்த மனோபாவம் இப்பொழுதும் எங்களிடம் இருக்கின்றது. இந்த அரசாங்கம் கூட நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இயங்கவில்லை என்ற ஆதங்கமும் கவலையும் எங்களிடம் இருக்கின்றது. நான் உள்ளூராட்சி சேவையிலும் கூட்டுறவுத் துறையிலும் பலகாலம் சேவையாற்றியிருக்கிறேன். மாகாண சபைக்கு வருவதற்கு முன் நான் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்ற வகையில் இத்துறைக்குப் பொறுப்பாக இருந்து செய்த சேவைகளை தற்போது செய்ய முடியாதுள்ளது என்ற கவலையும் ஆதங்கமும் என்னிடம் இருக்கின்றது.

மாகாண சபையைப் பொறுத்தவரையில் 13 ஆவது திருத்தச்சட்டமோ, மாகாண சபை முறைமையையோ எங்களுடைய அபிலாஷைகளை பூர்த்தி செய்யாது என்று ஆரம்பத்திலிருந்தே கூறிக்கொண்டிக்கிறோம். 1987ஆம் ஆண்டில் 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் மாகாண சபைகள் சட்டவரைபை முன்வைத்துபோது அப்போதைய அரசியல் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோர் இது எற்றுக்கொள்ளக்கூடிய முறைமை அல்ல என்று அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ரஜீவ் காந்திக்கே கூறியிருந்தனர்.

cvk siva555 (1)

அந்த நிலைமை இன்றும் இருக்கிறது. தேர்தல் காலத்திலும் சரி, இப்பொழுதும் சரி மாகாண சபை முறைமை என்பதும் 13 ஆவது திருத்தச்சட்டம் என்பதும் எங்களுடைய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாது என்பதை நாங்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறோம் என்பது மட்டுமல்ல பகிரங்கமாகவே சொல்லியும் இருக்கிறோம். நாம் ஒரு தெளிவான தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே தேர்தலில் போட்டியிட்டோம். மாகாண நிர்வாகம் சிங்கள இனவாத கட்சிகளிடம் சென்றுவிடாமல் இருக்கும் பொருட்டும் எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பற்றிப் பேசவும் செயற்படவும், அத்துடன் எமது அரசியல் தீர்வு காண்பதற்காக ஜனநாயக மற்றும் இராஜதந்திர முறைகளில் பயணிப்பதற்கு இதை ஒரு தளமாகப் பாவிக்கவுமே இந்தத் தேர்தலில் போட்டியிட்டோம். மாகாண சபையை எங்களுடைய உரிமைகளை ஜனநாயகரீதியில் பேசக்கூடிய, பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய சர்வதேசத்தோடு பேசக்கூடிய ஒரு தளமாகப் பாவிக்கவேண்டும் என்று சொன்னோம்.

இப்பொழுதும் அவ்வாறே இயங்கி வருகிறோம். அப்படி இல்லை என்றால் பல விடயங்களை ஆக 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பேசக்கூடிய ஒரு நிலை தொடர்ந்திருக்கும். இந்த நிலையைப் போக்கவே 2011இல் கிழக்கு மாகாணத்திலும் 2013இல் வடக்கு மாகாணத்திலும் போட்டியிட்டோம். இதையொரு ஜனநாயகப் பலமாகப் பாவிப்பதற்காக. இதன்மூலம் – ஜனநாயக தேர்தல்கள் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 41 மாகாண சபை உறுப்பினர்களின் குரல்கள் ஒலிக்கக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

முன்னைய அரசினால் எங்களுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. ஒதுக்கப்பட்ட நிதி முறையாகச் செலவழிக்கவில்லை என்று குறைசொல்லப்பட்டது. அது உண்மையல்ல. அவ்வாறான கூற்றுக்களை எதிர்க்கட்சிகள் பேசிய காரணத்தால் 402 மில்லியன் ரூபா எங்களது ஒதுக்கீடுகளில் மத்திய அரசினால் குறைக்கப்பட்டது. இதுதான் இறுதியாக எமக்கு கிடைத்த பலன். இந்தத் தளத்தில் இருந்து எங்களுடைய மக்களுக்கு என்னென்ன செய்யமுடியும் என்பதை செய்ய முயன்றுவருகின்றோம்.

நான் உள்ளூராட்சியில் இருந்தவன் என்ற வகையில் நான் செய்த முதலாவது பணி சனசமூக நிலையங்களின் செயற்பாடுகள் அருகிவரும் காரணத்தால் முதலாவது அறிக்கையாக முதலமைச்சருக்கு நான் சமர்ப்பித்தது மாகாண சபையின் கீழ் உள்ள 1200 சனசமூக நிலையங்களுக்கு ஆகக் குறைந்தது. 5 ஆயிரம் ரூபா ஆவது ஒதுக்கீடாக, நன்கொடையாக வழங்கவேண்டும் என்பது. மந்திரிசபைக்கும் அமைச்சர் வாரியத்துக்கும் இதை சிபார்சு செய்திருந்தேன். அமைச்சரவையும் அதை ஏற்றுக்கொண்டு இந்த வருடத்தில் இருந்து 5ஆயிரம் தொடக்கம் 10ஆயிரம் ரூபா வரை பகிந்தளிக்க முடிவு செய்யப்பட்டது.

SHARE