தார் வீதிகளுக்கும் கொங்கிறீட் வீதிகளுக்கும் நாம் அரசியல் செய்யவில்லை. எமது மக்களின் சுயநிர்ணய வாழ்வுக்காக நாம் அரசியல் செய்கிறோம். அரியநேத்திரன்

354

 

மட்டக்களப்பு போரதீவுப் பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வும் கௌரவிப்பு நிகழ்வும் அதிபர் ச.கணேசமூர்த்தி தலைமையில் 11.03.2015 அன்று புதன் கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

விசேட அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை இரா.துரைரெட்ணம் அகியோருடன் சிறப்பு அதிதியாக பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பிரதேச பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சமூகத்தில் பெண்கள் உயர்வாக மதிக்கப்படவேண்டும் என்பதை பாடசாலை மாணவர்களின் மனங்களில் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்நிகழ்வின் நோக்கம் என பாடசாலையின் அதிபர் தனதுரையில் தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இதன் போது ஆசிரியைகள், மாணவிகள், மாணவர்களின் பெற்றோர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

வடக்கையும் கிழக்கையும் பிரித்து அரசியல் செய்யும் நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழன் தமிழனாக தன்மானத்துடன் சுயநிர்ணய ஆட்சியில்  வாழ்வதே தமது நோக்கமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.  இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘வடக்கு, கிழக்கில் இருக்கின்ற அமைச்சுப் பதவிகளும் ஏனைய விடயங்களும் எமக்கு கிடைத்துள்ளமை தற்காலிக விடயங்களே தவிர, அவை நிரந்தரமான தீர்வு அல்ல. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்ற 8 தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. தார் வீதிகளுக்கும் கொங்கிறீட் வீதிகளுக்கும் நாம் அரசியல் செய்யவில்லை. எமது மக்களின் சுயநிர்ணய வாழ்வுக்காக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்துகொண்டிருக்கின்றது. அபிவிருத்திகள் நீடித்து நிலைத்திருக்கவேண்டும். எமக்குரிய அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். எனவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எமது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  ஆதரித்தால், தற்போது ஐ.நா. சபையின் வாசல் கதவை தட்டும் நாம், அந்தக் கதவைத் திறந்து உள்ளே போகும் சந்தர்ப்பம் ஏற்படும்’ என்றார்

 

SHARE