திருகோணமலை கச்சேரியில் நடைபெற்ற கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முழுக்க, முழுக்க தனிச் சிங்கள மொழியிலேயே நடைபெற்றதாக கவலையும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

391

 

 

திருகோணமலை கச்சேரியில் நடைபெற்ற கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முழுக்க, முழுக்க தனிச் சிங்கள மொழியிலேயே நடைபெற்றதாக கவலையும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சர் கரு ஜயசூரிய போன்ற புதிய அரசின் முக்கிய அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பிரதம அதிதிகளாக கலந்துகொண்ட இக்கூட்டம் ஆரம்பம் முதல் கடைசி வரை சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்பெற்றதாகக் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

image_handle (1) image_handle (2) image_handle

நேற்று செவ்வாய் மாலை நடைபெற்ற கல்முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தில் மாநகர சபையின் பிரதி மேயரும், முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் இந்த விடயத்தை எடுத்துக் கூறி பெரும் கவலையும், கண்டனமும் தெரிவித்தார். மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்தில் பிரதி மேயர் மஜீத் இந்த விடயத்தைப் பிரஸ்தாபித்ததுடன், குறித்த விசேட கிழக்கு மாகாண இணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ் மொழியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சிங்களத்திலேயே பதிலளிக்கப்பட்டதாகவும் விசனம் தெரிவித்தார்.

பொது நிர்வாகத்திற்கும், அரச சுற்று நிருபங்களுக்கும் பொறுப்பான அமைச்சர் கரு ஜயசூரிய பங்குகொண்ட முக்கிய இக்கூட்டத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டமை பெரும் வருத்தத்திற்குரியதென சபையில் உரையாற்றிய பிரதிமேயர் மஜீத் சுட்டிகாட்டினார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி நிர்வாக மொழியாகவிருந்தும் இந்த விஷேட மாகாண இணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ் மொழிக்கு இடமில்லாமல் போனமை கண்டிக்கத்தக்கதெனவும் பிரதி மேயர் மஜீத் சபையில் கூறினார்.

SHARE