முப்பது வருடங்களாக தொடர்ச்சியாகத் தமிழ் ஈழம் அமைக்கும் நோக்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின் சர்வதேசக் காவற்றுறையினரால் குமரன் பத்மநாதன்’ போன்ற முக்கியஸ்தர்கள் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்கள்.
இப் பின்னணியில் தான் உருத்திரகுமாரன் அவர்களைப் பிரதம அமைச்சராகக் கொண்டு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு என்னும் நிழல் அரசு தோற்கடிக்கப்பட்டது. நிழல் ஆட்சியை முன்னெடுத்து நிஜ ஆட்சியைச் செய்யமுடியாத நிலையில் விடுதலைப்புலிகள் தோல்வியடைந்தமை நல்லோர்கள் பலரதும் உள்ளங்களைத் துன்புறுத்தியது. இக்கட்டத்தில் உலகளாவியளவில் மிகுந்த பலம் மிக்கதாக விளங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பானது தன் தனித்துவத்தையும் தமிழ் மக்களின் சுயாட்சிக்குச் சமநெறி சார்ந்த அரசு இலங்கையில் அமையாத வரையில் தனி நாடு ஒன்று மட்டும் தீர்வாக முடியும் என்னும் நியாயவான்களின் தீர்ப்பையும் கட்டிக் காத்து அசாதாரணமான ஆயுத பலம், ஆயுதக் கட்டமைப்புக்கள், ஆளணி, நிதிப்பலம் என்பவற்றையும் இலங்கையில் மட்டுமல்ல உலகலாவியளவிலேயே தன்னகத்தே கொண்ட விடுதலைப்புலிகள் அமைப்பையும் அதன் ஆத்ம தாகமான தமிழீழம் என்னும் கோட்பாட்டையும் எப்படித்தான் கைவிடமுடியும்? ஆதனால் தான் நாடு கடந்த ‘தமிழீழ அரசு’ என்னும் எண்ணக்கருவும் தோற்றுவிக்கப்பட்டு அதன் பாற்பட்ட அமைப்பும் உருவாக்கப்பட்டு உருத்திரகுமாரன் அவர்களைப் பிரதமராகக் கொண்டு இயங்கியும் வருகின்றது.
இவ்வரசானது கற்பனையானதும், அர்த்தமற்றதுமான ஒன்றாகவே இருக்குமென எண்ணுவோரும் இருக்கத்தான் செய்வார்கள். மொழி அறிவின் பாற்பட்டு மட்டும் ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ என்பதை ஆய்வு செய்யும்போது அர்த்தமில்லாதவொன்றாகத்தான் அது தோன்றும். ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டது போல் தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தின் அசாதாரண பலமும் அப்போராட்டத்தின் பால் அமைந்த சர்வதேசிய நிதிப்பலமும் என்றைக்குமே ‘தமிழீழ அரசு’ தவிர்ந்த வேறெந்த வழியிலுமே இலங்கைத் தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெறமுடியாது என்னும் நேர்மையாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட முடிவும் ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ என்னும் நிழல் அரசின் இன்றியமையாத தேவையை உறுதி;ப்பட ஊர்ஜிதம் செய்கின்றன. இதனால் ‘உருத்திரகுமாரன்’ அவர்களைப் பிரதமராகக் கொண்ட ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ என்பதும் அதன் நிலைப்பாடும் இலங்கைத் தமிழ் மக்களினதும், உலகத் தமிழ் மக்களினதும் மிகவும் பொறுப்புணர்வோடும், அக்கறையோடும் உள்ளீர்க்கப்படவேண்டியவையே.
இவ்வரசின் நிலைப்பாடு யுத்தத்தில் பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டபோதும் கூட இன்னுங் கூட அவர் தான் இலங்கைத் தமிழ் மக்களினதும், உலகத் தமிழ் இனத்தினதும் உள்ளங்களில் மானசீகமான தமிழீழத் தேசியத் தலைவராக விளங்குகின்றார் என்பதையும் யுத்தத்தில் மாவீரர்களான பல்லாயிரக்கனக்கான போராளிகளின் வீர வித்துக்கள் செத்துமடியவில்லையெனவும் அவை உயிர்பெற்று மீண்டும் எழுந்து புதிய போராளிகளாகி நவீன மாவீரர்களாகி மாண்டு மடிந்து ‘தமிழீழ நிஜ அரசு’ நிச்சயம் உருவாகும் என்பதைத் தற்போதைய உருத்திரகுமாரன் தலையில் அமைந்த ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ தனது முதன்மை நிலைப்பாடாகக் கொண்டிருக்கின்றது.
இலங்கையில் இவ்வரசானது இலக்கைத் தமிழ் மக்களுக்குள் தமது அசாதாரணமான யுத்தத்தினால் இலங்கை அரச நிர்வாகத்தைத் தமிழர் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றி அப்பிரதேசங்களில் நிழல் ஆட்சியை நிலைநாட்டி வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சி நிர்வாகத்தை இன்றுங்கூடத் சர்வதேசியளவில் நிலைநாட்டும் அசாதாரணமான நிலைப்பாட்டைத் தன்னத்தே கொண்டுள்ளது இந்நிலைப்பாடானது அவ்வரசை இலங்கைத் தமிழ் மக்களின் தீர மிகு காவலராக ஆக்கியிருப்பதோடு அவ்வரசின் பிரதமர் உருத்திரகுமாரன் அவர்களை அம்மக்களின் வோஷகராகவுமாக்கியருக்கின்றது. மேலும் பல்லாயிரக்கணக்கான போராளிகளையும் வீரமரணமடைந்த கரும்புலிகள், கடற்புலிகள், கடற்கரும்புலிகள் முதலானோரையும் இன்றுங்கூட உயிர்ப்பு நிலையில் முன்னிறுத்தி இலங்கைத் தமிழ் மக்களின் சுய நிர்ணயத்தின் பாற்பட்ட சுயாட்சியை உலகளாவியளவில் ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ பாதுகாத்து வருவதையும் அதன் தற்போதைய நிலைப்பாடாகக் கொண்டுள்ளது.
யுத்தம் இடம்பெற முதலிலேயே அசாதாரண நிதிப் பலத்தை உள்ளுர் மட்டங்களிலும் சர்வதேச மட்டங்களிலும் பெற்றுவிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பானது தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக யுத்தம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருந்த காலப்பகுதியிலும் மேலும் விரிவுபடுத்திய நிலையில் தமது நிழல் ஆட்சி நிர்வாகத்தையும் முற்றாக இழந்த நிலையிலும் அதிகளவு நிதிப்பலத்தை விடுதலைப்புலிகள் அமைப்பானது தன்னகத்தே கொண்டிருக்கத்தான் செய்தது இவ்வாறான நிதிப் பலத்தை சர்வதேசியளவில் பாதுகாத்து தமிழ் மக்களின் சுயாட்சி தொடர்பான நடவடிக்கைகளைத் தேச மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் தொடர்ந்தும் முன்னெடுக்கும் நிலைப்பாட்டையும் ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ தன்னகத்தே வரித்துக்கொண்டுள்ளது. அத்தோடு இந்தியப்படையானது மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் உருவாக்குமிடத்தும் அப்போராட்டத்துக்கான நகர்வுகளுக்கும் பெரிதும் பயன்பெறும் என்றால் அதைக் கட்டிக்காக்கும் கண்ணியமிக்க நடவடிக்கையும் நாடு கடந்த தமிழீழ அரசின் மேலுமோர் நிலைப்பாடாக உள்ளது. அத்தோடு தமிழ்க் கட்சிகளும் வழிதவறிச் சென்று காலம் காலமாகத் தொடர்ச்சியாகச் சுழன்று வந்த துரோகத்தனங்களுக்குள் அமிழ்ந்து விடாமல் தடுத்து நிறுத்துவதும் இந் நாடு கடந்த தமிழீழ அரசின் நிலைப்பாடாக உள்ளது.
இலங்கை நாடாளுமன்ற பதவிசுகம் கருதியும், அதன் வழி ஈட்டப்படக் கூடிய பணம், பொருள் எண்ணியும் கொழும்பு அரசினரதும் தமிழ் பிரதேசங்களில் இன்றும் எச்சங்களாகவுமுள்ள கைக்கூலிகளின் கைப்பொம்மைகளாக மாறி சோரம்போவதைத் தடுத்து நிறுத்தும் நிலைப்பாடும் நாடு கடந்த தமிழீழ அரசு என்னும் நிர்வாகக் கட்டமைப்புக்குள் பொதிந்துள்ளது. இலங்கை நாடாளுமன்றப் பதவி சுகம் கருதம் விடயத்தை மாவைசேனாதிராஜா அவர்களின் மைத்திரியரசுக்குத் தமிழ் மக்களுக்கு தாம் வாக்களிக்குமாறு கோரி அவர்களும் வாக்களித்தமையால் அவ்வரசானது தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் என்னும் தேறுதலும், எதிர்க்கட்சித் தலைவர் பதவி யொன்றைப் பெறுவதற்குரிய ஏது நிலையொன்று தென்படுவதை இனங்கண்ட சம்பந்தன் அவர்கள் இன்னும் பத்தாண்டுகள் தொடர்ச்சியாக மைத்திரி அவர்கள் ஆட்சியில் இருப்பாரானால் நிச்சயமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பார் எனக் கூறி தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான அங்கலாய்ப்பைத் தன்னுடைய சுயத்தை மறந்த நிலையில் வெளியிட்டமையும் உருத்திரகுமாரன் அவர்களின் நாடு கடந்த தமிழீழ அரசின் இன்றியமையாமையை எடுத்து இயம்புகின்றது.
நாடு கடந்த தமிழீழ அரசு என்னும் ஓர் அமைப்பு இல்லாவிட்டால் தனித் தமிழீழம் என்னும் கோட்பாட்டைப் பின்னிருத்தி நாடாளுமன்ற நலனை முன்னிருத்தி ஒரே இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்னும் மையக்கருவை முன்வைத்து பகிரங்க மைதானத்தில் பந்து விளையாடிக் கொண்டிருக்கும் நவீன தமிழ் தேசிய வாதிகளின் மைத்திரி ஆதரவில் அமைந்த கருத்து வெளிப்பாடும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அடைவதற்கான ஆதங்கமும் அவர்களுடைய அரசின் வெளிப்படையான கைக்கூலிகளுடன் முட்டிக்கொண்டு பொது நிகழ்வுகளிலும், திறப்பு விழாக்களிலும், அரச நிர்வாக மாநாடுகளிலும் பங்கு பற்றுகின்றமையும் இந் நவீன தமிழ்த் தேசிய வாதிகள் தமிழ்த் தேசியம் என்னும் முகமூடியைப் பாதுகாப்புக் கவசமாகக் கொண்டே தமது துரோகத்தனங்களை அரசின் பகிரங்க கைக்கூலிகளுக்குச் சளைக்காமல் அரங்கேற்றி வருவார்கள் என உறுதிப்படக் கூறவும் முடியும் எனவே இவர்களை இவ்வசிங்கமான, அலங்கோலமான பாதையில் விரைந்து செல்வதைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல முற்றாகத் தடுத்து நிறுத்துவதும் நாடு கடந்த தமிழீழ அரசின் நிலைப்பாடாக உள்ளது.
மேலும், அரசின் பகிரங்கக் கைக்கூலிகளான நீலம், பச்சை உட்பட அனைத்துத் தரப்பினரையும் சர்வதேச அளவில் அம்பலப்படுத்தித் தமிழ் நாட்டிலும் இலங்கைத் தமிழ் மக்களுக்குள்ள அவர்களுடைய நிஜமான சோற்றுப் பிண்டங்கள் என்னும் தோற்றப்பாட்டை வெளிக்கொனர்வதும் நாடு கடந்த தமிழீழ அரசின் இன்னுமொரு நிலைப்பாடாக இருக்கின்றது.
இன்றும் இடதுசாரிகள் எனத் தம்மை இனங்காட்டிக் கொண்டே மஹிந்த அரசில் பங்கு பற்றிய இடதுசாரிக் கட்சிகளான லங்க சமசமஜக் கட்சி, இலங்கை கம்யூஸ்கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களின் முகமூடிகளைக் கிழித்தெறிந்து தமிழ் மக்களின் மனிதம், சுயமரியாதை, சுயட்சி என்பவை தொடர்பில் இவர்களும் இனவாதிகளே என எடுத்தியம்பித் தமிழ் மக்களுக்குள் இக்கட்சிகள் சார்ந்த அரசியல் வளர்வதைத் தடுத்து நிறுத்துவதும் நாடு கடந்த தமிழீழ அரசின் நிலைப்பாடாக உள்ளது.
முஸ்லிம் லீக் போன்ற இஸ்லாமிய அரசியல் கட்சிகள் கிழக்கிலங்கையில் இஸ்லாமிய மக்களின் அதிகளவான வாக்குகளைப் பெற்று தமிழர் விரோத ஆட்சிக்குத் துணைபோய்க் கிழக்கு மாகாணசபையை அடக்கி ஆளுவோருக்கு தாரைவாப்பதையும் அம்பலப்படுத்தி கிழக்கில் தமிழர் தனித்துவம் பேணப்படுவதை வலியுறுத்தி நிற்பதும் நாடு கடந்த தமிழீழ அரசின் நிலைப்பாடுகளில் மேலும் ஒன்றாக உள்ளது.
அத்தோடு மலையக தமிழ் மக்களைச் சூதாட்டக் காய்களாகப் பயன்படுத்தி அமைச்சர்ப் பதவிகளுக்காகவும், பிரதி அமைச்சர்ப் பதவிகளுக்காகவும் வாயில் நீர் ஊறச் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் மலையகத் தமிழ் அரசியல் வாதிகள் தமிழீழம் என்னும் கோட்பாட்டிற்கு பொதுவாகத் தமிழர் மட்டத்திலும் சிறப்பாகத் தலைநகர் கொழும்பு மட்டத்திலும் மிகவும் வலுவான ஆபத்துமிக்க எதிரிகள் ஆவர் இவர்களுக்குள் மேலக மக்கள் முன்னணி தமிழ் முற்போக்குக் கூட்டணி என்னும் வடக்குக் கிழக்குப் பூர்வீகத் தமிழ் மக்கள் தவிர்ந்த தமிழ் மக்கள் சார்பிலும் இப்பகுதிகளைப் பூர்விகமாகக் கொண்டும் பின்னர் மேல்மாகாணத்தைப் பூர்விகமாகக் கொண்டு வாழும் தமிழ் மக்கள் சார்பிலும் உருவாக்கப்பட்ட கட்சிகளும் அவற்றில் இலங்கையில் ஆட்சிக்கு வரக்கூடிய இருதரப்பரினதும் நலன்களுக்காக அவர்களுக்குள் இரு வேறுபட்ட பிரிவினராக நின்று வாக்குச் சேகரித்துக் கொடுக்கும் அறப்பணியிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டி இவ் ஆபத்திலிருந்து தமிழீழத் தாயகத்தையே வாழ்விடமாகக் கொண்ட தமிழ் மக்களைப் பாதுகாத்து நிற்பதும் நாடுகடந்த தமிழீழ அரசின் நிலைப்பாடாகவும் உள்ளது.
மலையகத் தமிழ் அரசியல்வாதிகளுடைய ஆயுதப் போராட்டத்தின் பின்னரான தலைநகரை மையமாகக் கொண்ட அரசியல் கதாநாயகத்தனம் கொழும்பை மையப்படுத்தும் அரசியல் நகர்வில் தலைநகரிலும், மலையகத்திலும் வேலைவாய்ப்புப் போன்ற விடயங்களில் வடக்குக் கிழக்கு அரசியல்வாதிகளையும் தமிழ் இளையோர்களையும் பின்னடிக்கவே செய்கின்றது. எனவே நாடு கடந்த தமிழீழ அரசானது இவ்வுண்மை நிலைமையையும் எடுத்து இயம்பி வடக்குக் கிழக்கு இளையோரின் தலைநகர் தழுவிய, நாடு தழுவிய, பிரதேசம் தழுவிய அவலத்தைத் தடுத்து நிறுத்தும் நிலைப்பாட்டையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
சுருங்கக்கூறின் வடக்குக் கிழக்கின் வருங்காலச் சந்ததியின் சுயமரியாதையின் பாற்பட்ட, சுயநிர்ணயத்தின் பாற்பட்ட வாழ்வைப் பின்னணியாகக் கொண்டே இலங்கையின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் மக்களின் வாழ்வை நிர்ணயிக்க வேண்டுமே ஒழிய, ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் மக்களின் வாழ்வைப் பின்னணியாக் கொண்டு வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் வாழ்வை நிர்ணயம் செய்வது அடி முட்டாள்த்தனமானது.
வடக்குக் கிழக்கைச் சேர்ந்த இளையோரினால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டத்தின் தோல்வி மலையகத் தமிழ் அரசியல் வாதிகளையும், இஸ்லாமிய அரசியல்வாதிகளையும் தேசம் தழுவியளவிலும் தலைநகர் கொழும்பை மையமாகக் கொண்டும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களினதும் இளையோரினதும் நலனை வடக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களினதும் இஸ்லாமிய மக்களினதும் நலனின் பால் செயற்படுவதற்கு வாய்ப்பளித்துள்ளது. இவ்வாய்ப்பானது வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் குறிப்பாக இளையோரின் நலனுக்குப் பெரிதும் பாதகமாக அமையுமாகையால் இப்பரிதாப நிலையைப் புரிந்து கொண்டு இதை ஊடக வாயிலாக வெளித்தெரியவைத்து வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களினதும் இளையோரினதும் எதிர்காலம் இருள்சூழாதபடி ஒளியேற்றுவதும் நாடு கடந்த தமிழீழ அரசின் நிலைப்பாடாகவிருக்க வேண்டும்.