நாட்டை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்படவேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இதுவே சிறந்த உபாயம். எனவே எம்முடன் இணைந்து செயற்படுமாறு அவர்களை நான் மீண்டும் கோருகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. 2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பித்து ஆற்றிய ஆரம்ப உரையிலேயே இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். அவர் தனது உரையில் குறிப்பிட்டவை வருமாறு:- எனது படைகள் ஓர் இனத்துக்கு எதிராக யுத்தம் நடத்தவில்லை. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே யுத்தம் நடத்தியது. அதில் நாம் வெற்றிகொண்டுள்ளோம். இப்போது யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அமைதிச்சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த எல்லா மக்களும் அவர்களது சொந்த நிலத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இலங்கை பிரச்சினையில் வெளித் தலையீடுகளும் அழுத்தங்களும் இருக்கவே செய்கின்றன. எனவே நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணையவேண்டும். எம்முடன் இணைந்து பணியாற்றவருமாறு மீண்டும் ஒருமுறை அவர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.- என்றார்.