நேபாளத்தில் இன்று சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 1130 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என நேபாளத்தின் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லஷ்மி டாகல் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பழமையான கோவில்கள் உட்பட ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. நூறுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறதது .
நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தின் அருகே இன்று காலை 11.41 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 30 விநாடிகள் வரை நிலநடுக்கம் நீடித்ததால் பீதி அடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலங்களை விட்டு அலறியடித்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ரிச்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக காத்மாண்டு உட்பட நேபாளத்தின் பல்வேறு நகரங்களில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. கட்டடம் இடிந்து விழுந்ததில் காயம் அடைந்வர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிலநடுக்க பீதியால் வீதிகளிலேயே காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரபலமான தரஹரா கோபுரம் உட்பட காத்மண்டுவில் உள்ள பழமையான கோவில்கள் என்பன நிர்மூலமாகியுள்ளன. நிலநடுக்கத்தின் பாதிப்பு மறைவதற்குள் நண்பகல் 12,30 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தின் பின் விளைவாக ஏற்பட்ட இது ரிச்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவாகி உள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் நேபாளத்தின் பெரும்பாலான பகுதிகளில் தகவல் தொடர்பு சேவை முடங்கி உள்ளது. காத்மண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது