வடக்கு,கிழக்கு பகுதிகளிலுள்ள எந்தவொரு படைமுகாமும் அகற்றப்படமாட்டாதெனவும் அதே போன்று படைக்குறைப்பு நடைபெறாதெனவும் மைத்திரி அரசின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன இன்று திட்டவட்டமாகத் பலாலியினில் வைத்து தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களைப்போன்று ஏனைய மக்களின் பாதுகாப்பைக்கருத்திற் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட இராணுவ முகாம்கள் எந்தவிதத்திலும் அகற்றப்படாது என அதற்கு விளக்கமளித்துமுள்ளார்.
இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன பலாலி இராணுவப் படைத்தளத்திற்கு சென்று அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாறறியிருந்தார்.முன்னதாக அவர் யுத்தத்தினில் உயிரிழந்த படையினருக்கென பலாலியினில் நிறுவப்பட்டுள்ள தூபியினில் அஞ்சலி செலுத்தினார்.
அவர் தனது உரையினில் வடக்கு,கிழக்கு இணைந்த ஏனைய பிரதேசங்களிலும் இராணுவ குறைப்பிற்கு இடமில்லை.ஆனாலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுத்து தேசிய பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டுமே தவிர தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களை சுயநல அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.
கடந்த காலங்களில் இராணுவம் தொடர்பான தவறான கருத்துக்களும் ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டுள்ளது. எனவே தமிழ்மக்களின் பிரச்சினைகள் மற்றும் இடையூறு தொடர்பிலும் அரசு என்ற வகையில் கவனம் செலுத்தி இதற்கு தீர்வொன்றையும் பெற்றுத்தரும் அதேசமயம் இராணுவ முகாம்களும் எந்தவிதத்திலும் அகற்றப்படமாட்டாது எனவும் திட்டவட்டமாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பு உயர்பாதுகாப்பு வலயமென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களது காணிகளிலான மீள்குடியமர்வை கேள்விக்குரியதாக்கியுள்ளது.