கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசு பக்கம் தாவினர்! பேசப்பட்ட பேரத்தொகை எவ்வளவு?
தமிழ் தேசியக்கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் உறுப்பினர்கள் மூவரும், ஐக்கிய தேசியக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து தாம் சிறீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்துள்ளதாக இன்று (26.12) காலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர்களான திரு.சுபாகரன்(பாபு), திரு.பார்த்தீபன், திரு.ராஜசேகரம்(சேகர்) ஆகியோரும், ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த திரு.பிரசாத் என்பவருமே இன்று அரசு பக்கம் தாவியவர்களாவர்.
இது தொடர்பில், இலங்கை தமிழரசுக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தொடர்புகொண்டு கேட்டபோது,
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கட்சியின் முடிவை அறிவிக்க திராணியில்லாமல் இந்தியாவில் ஒழிந்து கிடப்பதாகவும், மாவை.சேனாதிராசாவிடம் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டால், சம்பந்தன் நாடு திரும்பியதும் முடிவை அறிவிப்போம் என்று கூறுவதாகவும், சம்பந்தன் தேர்தல் முடிந்த பின்னர் நாட்டுக்கு திரும்புவார். அதற்கு பின்னரா இவர்கள் முடிவை அறிவிக்கப்போகின்றனர்? இது மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பொது எதிரணியின் முக்கியஸ்தர்கள் சந்திரிகா, ரணில், மைத்திரியுடன் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர், கூட்டமைப்பின் ஆதரவு நிலைப்பாடு தொடர்பில் பேச சென்றபோது, அவர்கள் எல்லாம் சம்பந்தனுடன் பேசி முடிந்தாயிற்று. உங்களுடன் ஒன்றும் பேசுவதற்கில்லை என்று கூறி அவமானப்படுத்தி திருப்பியனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார். கிராம மட்டங்களில் மக்கள் சந்திப்புகளை நடத்தி கூட்டமைப்பின் முடிவை உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்தாமையே இத்தகைய குழப்பங்களுக்கு எல்லாம் காரணம் என்றும் அவர் கடிந்து கொண்டார்.
இதேவேளை அரசு பக்கம் தாவிய திரு.சுபாகரன்(பாபு), திரு.பார்த்தீபன் ஆகிய இருவரும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் ஆசன ஒதுக்கீடு ஊடாகவும், திரு.ராஜசேகரம்(சேகர்) புளொட் கட்சியின் ஆசன ஒதுக்கீடு ஊடாகவும் அரசியலுக்குள் பிரவேசித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியுமா?
என குறித்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேள்வி எழுப்பியபோது, அப்படி எவராலும் செய்ய முடியாதெனவும், ஏனெனில் கூட்டமைப்புக்கென ஒரு யாப்பு வரைபு இல்லை எனவும், அது ஒரு பதிவு செய்யப்பட்ட கட்டமைப்பாக இயங்கவில்லை எனவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.