பந்துவீச்சில் சொதப்பிய இந்தியா… மொத்தமாக அடித்து நொறுக்கி கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா

96

 

இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி கிண்ணத்தை வென்றுள்ளது.

240 ஓட்டங்கள்
13-வது உலகக் கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

நாணய சுளற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.

இதில் சுப்மன் கில் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ரோகித் சர்மா 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி(54) சற்று நிதானமாக ஆடி அரை சதத்தைக் கடந்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் 4 ஓட்டங்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். கே.எல்.ராகுல் 66 ஓட்டங்களிலும் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்கள் சேர்த்தது.

டிராவிஸ் ஹெட் 137 ஓட்டங்கள்
இதையடுத்து 241 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது அவுஸ்திரேலிய அணி. துவக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் 7 ஓட்டங்களில் ஏமாற்றமளிக்க, மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ட்ராவிஸ் ஹெட்.

மிட்செல் மார்ஷ் 15 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 4 ஓட்டங்களில் வெளியேற, டிராவிஸ் ஹெட் 58 பந்தில் 50 ஓட்டங்கள் சேர்த்து அணியை வலுப்படுத்தினார்.

25 ஓவர் முடிவில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்கள் எடுத்தது. இதனிடையே, டிராவிஸ் ஹெட் 95 பந்தில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 137 ஓட்டங்கள் குவித்து சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 42 பந்துகள் எஞ்சிய நிலையில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி 6வது முறையாக உலகக் கிண்னத்தை கைப்பற்றியது.

SHARE