பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்குமாறு தேசிய பாதுகாப்புச் சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்பு விடுத்திருக்கிறார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டார். வழக்குத் தாக்கல் இன்றி 182 முதல் 189 பேர் வரையானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார். எனவே, இவர்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்? என்று எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால மேற்கண்டவாறு தெரிவித்தார். இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தவை வருமாறு:- “புதிய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களே ஆகின்றன. இந்நிலையில், நாம் முக்கிய சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
அந்த வகையில், தடுத்துவைக்கப்பட்டுள்ளோர் விவகாரத்தில் வழக்குத் தொடர முடியுமா? அவர்களை விடுதலை செய்வதற்கு ஏதுவான நிலை காணப்படுகின்றதா? என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன். அந்த அறிக்கை இன்னும் ஓரிரு வாரங்களில் கிடைக்கும். அதன்பின்னர் தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். குறிப்பாக விடுதலை செய்யப்பட்டால், அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும். அது அடிப்படைஉரிமையும் கூட’