பறிபோன உலகக் கிண்ணம்… நாங்கள் செய்த தவறு இதுதான்: உண்மையை உடைத்த ரோகித் சர்மா

88

 

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், செய்த தவறு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் அணித்தலைவர் ரோகித் சர்மா.

சாக்கு சொல்ல விரும்பவில்லை
அவுஸ்திரேலியா அணியின் வெற்றி ரகசியத்தை குறிப்பிட்ட ரோகித் சர்மா, இந்திய அணியின் தோல்விக்கு சாக்கு சொல்ல விரும்பவில்லை எனவும் வெளிப்படையாக கூறி அதிர வைத்தார்.

சேஸிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் அவுஸ்திரேலியா அணி நாணய சுழற்சியில் வென்றது. இரண்டாம் பாதியில் துடுப்பாட்டத்தில் இறங்கும் அணிக்கு ஆடுகளம் சாதகமாக மாறும் என கூறப்பட்ட நிலையில், அது அப்படியே நடந்தது.

இந்தியா முதலில் துடுப்பெடுத்து ஆடிய போது பவுண்டரிக்கு பந்துகளை விரட்டவே கடினமாக இருந்த நிலையில், அவுஸ்திரேலிய அணி சேஸிங் செய்த போது நிதான ஆட்டம் ஆடினாலும் அவ்வப்போது பவுண்டரி அடித்தது.

மேலும், ஆடுகளத்தின் தன்மை மாறியதால் இந்திய பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனது. அதுவே போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

20 – 30 ஓட்டங்கள் கூடுதலாக
போட்டிக்கு பின்னர் ரோகித் சர்மா பேசுகையில், போட்டி முடிவு எங்களுக்கு சாதகமாக வரவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்தோம். ஆனால், எதுவும் சரியாக நடக்கவில்லை.

இன்னும் 20 – 30 ஓட்டங்கள் கூடுதலாக எடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். கோஹ்லி, ராகுல் கூட்டணி ஆடிய போது 270 – 280 ஓட்டங்கள் வரை எடுப்போம் என நினைத்தேன்.

ஆனால், விக்கெட்டை வரிசையாக இழந்தோம். 240 ஓட்டங்கள் மட்டுமே வைத்துக் கொண்டு பந்து வீசும் போது நாங்கள் விரைவாக விக்கெட்களை வீழ்த்தி இருக்க வேண்டும். ஆனால், ஹெட் – லாபுஷேன் சிறப்பாக கூட்டணி அமைத்து ஆடினார்கள். எங்களை இந்தப் போட்டியில் இருந்தே வெளியேற்றி விட்டார்கள்.

மின் வெளிச்சத்தில் ஆடுகளம் சற்று மாறி விட்டதாக கருதுகிறேன். ஆனால், அதை ஒரு சாக்காக சொல்ல விரும்பவில்லை. நாங்கள் போதுமான ஓட்டங்கள் குவிக்கவில்லை என வெளிப்படையாக தெரிவித்துள்ளார் அணித்தலைவர் ரோகித் சர்மார்.

SHARE