பிபா உலகக் கோப்பை: கொடியேந்தி செல்ல இரண்டு டெல்லி சிறுவர்கள் தேர்வு

707
பிரேசில் நாட்டில் வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி தொடங்கும் உலககோப்பை கால்பந்துப் போட்டி ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்தப் போட்டியின் துவக்கவிழாவில் கொடிகளை ஏந்தி செல்லும் சிறுவர்களுக்கான தேர்வு புது டெல்லியில் இன்று நடைபெற்றது. அடிடாஸ் விளையாட்டு பொருட்கள் விற்பனை நிறுவனத்தின் நட்சத்திரத் தூதரான பிரபல கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். டெல்லி நகரைச் சேர்ந்த 500 சிறுவர்கள் இந்தத் தேர்விற்கு வந்திருந்தனர்.

இவர்களுள் செயின்ட் கொலம்பியா பள்ளியைச் சேர்ந்த மிஹிர் பத்ரா, மதர்ஸ் சர்வதேச பள்ளியைச் சேர்ந்த ஜசென் மோசஸ் ஆகிய இரண்டு சிறுவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பீட்டர்சன் இவர்கள் இருவர் பெயரையும் அறிவித்தார். இந்த சிறுவர்கள் வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி சாவ் பாலோவில் நடைபெறும் காலிறுதி ஆட்டத்திற்கு முந்தைய போட்டி நிகழ்ச்சியில் பங்கு பெறுவார்கள். இவர்களைத் தவிர மற்ற நகரங்களில் இருந்தும் தேர்வு செய்யப்படும் நான்கு சிறுவர்களும் சேர்ந்து மொத்தம் ஆறு பேர் அங்கு நடைபெறும் 16ஆவது போட்டியை பார்க்க இலவச அனுமதி பெறுவார்கள்.

கால்பந்து ரசிகர்களுக்கு பிரேசிலில் நடைபெறும் கால்பந்து திருவிழாவில் பங்கு பெறுவது அவர்களின் கனவை நனவாக்குவது போலாகும். இத்தகைய பெரிய முயற்சியை அடிடாஸ் மேற்கொண்டுள்ளது ஒரு அற்புதமான நிகழ்வாகும் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்தார்.

அடிடாசின் பிபா ஃபேர் பிளே நிகழ்ச்சி கால்பந்துப் போட்டியின் இளைய ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகும். அவர்கள் மிகவும் விரும்பும் வீரர்களின் நடவடிக்கைகளை நெருக்கமாக காணும் வாய்ப்பினை இதன்மூலம் சிறுவர்கள் பெறுகின்றனர் என்று அடிடாஸ் நிறுவனத்தின் பிராண்ட் இயக்குனர் துஷார் கோகுல்தாஸ் குறிப்பிட்டார்.

SHARE