இந்தியாவில் பாயும் முக்கிய ஜீவ நதிகளில் பிரம்ம புத்திராவும் ஒன்று. இந்த ஆறு இமயமலையில் உற்பத்தி ஆகி சீனாவின் திபெத் வழியாக இந்தியா மற்றும் வங்காள தேசத்துக்குள் பாய்ந்து கடலில் கலக்கிறது.
இந்த பிரம்மபுத்திரா ஆறு திபெத்தில் யர்லுங் ஷங்போ என்றழைக்கப்படுகிறது. திபெத்தில் இதன் குறுக்கே சீனா ரூ.9 ஆயிரம் கோடி செலவில் மிகப் பெரிய அணை கட்டுகிறது.
இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 3,300 மீட்டர் உயரத்தில் உள்ளது. உலகின் கூரை என்றழைக்கப்படும் பகுதியில் உள்ளது. இதனால் அங்கு 2 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் நிலையமும் கட்டப்படுகிறது.
அதுபோன்று மேலும் 4 அணைகள் கட்டப்பட உள்ளன. தற்போது ஒரு அணை கட்டி முடிக்கப்பட்டது. நேற்று அதில் மின் உற்பத்தி தொடங்கி சோதனை நடத்தப்பட்டது.
சீனாவில் அணைகள் கட்டப்படுவதால் பிரம்ம புத்திரா ஆற்றின் நீரோட்டம் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் வடகிழக்கு மாகாணமான அருணாசல பிரதேசம் மற்றும் பல பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
சீனாவின் அணை கட்டும் திட்டத்துக்கு தொடக்கத்தில் இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதன் மூலம் தங்களுக்கு வெள்ள ஆபத்து ஏற்படும் என தெரிவித்தது. ஆனால் பெரிய அளவில் பாதிப்பு வராது என சீனா சமாதானம் செய்தது