பிரேசிலில் நடந்த இறகுப்பந்து போட்டியில் கலந்து கொண்ட மதுரையைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா 3 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
பிரேசிலின் கேசியாஸ் டோ சுல் நகரில் 24வது செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான கோடை ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது.
இதில் கலந்து கொண்ட மதுரையைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா(18), ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரிய வீராங்கனையான கேத்தரின் நியுடோல்டை வீழ்த்தினார். அதன் பின்னர் கலப்பு இரட்டையர் பிரிவில் அபினவ் சர்மாவுடன் இணைந்த ஜெர்லின், மலேசியாவின் பூன் மற்றும் டியோ ஜோடியை வீழ்த்தினார்.
பிரேசிலில் 3 தங்கம் வென்று சாதித்த இளம் தமிழச்சி!
மேலும், ஜப்பானை வீழ்த்திய இந்திய இறகுப்பந்து அணியிலும் இடம் பெற்றிருந்ததன் மூலம் 3 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். தனது 8வது வயதில் இந்த விளையாட்டை தொடங்கிய ஜெர்லின், இதற்கு முன்பும் தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.
குறிப்பாக, சீனாவில் நடந்த போட்டிகளில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்று சாதனை படைத்திருந்தார்.
2017ஆம் ஆண்டு துருக்கியில் நடந்த செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான ஒலிம்பிக்கில் பங்கேற்றபோது, மிக இளம் வயதில் பங்கேற்ற வீராங்கனை என்ற பெருமையை ஜெர்லின் அனிகா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.