ஹாங்காங்கில் முழுமையான ஜனநாயகம் கோரி, மாணவர்கள், பொதுமக்கள் சாலைகளை முற்றுகையிட்டு, கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தை சட்டவிரோதம் என சீனா அறிவித்தது.
இதற்கிடையே போராட்ட களங்களில் இருந்து போராட்டக்காரர்களையும், அவர்களின் கூடாரங்களையும் அகற்ற வேண்டும் என அங்குள்ள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி போலீசாரும், அதிகாரிகளும் நேற்று நடவடிக்கை எடுத்தனர். போராட்டக்காரர்களை அவர்கள் நேற்று முன்தினம் அப்புறப்படுத்தினர், கூடாரங்களையும் கலைத்தனர்.
ஆனால் போராட்டக்களத்தில் இருந்து பத்திரிகை அதிபரான ஜிம்மி லாய் விலக மறுத்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையை தொடர்ந்து அவர் ஆப்பிள் நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். இதே போன்று போராட்டக்களத்தில் இருந்து விலக மறுத்த 250 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.இதற்கிடையே ஜிம்மி லாயும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.