யாழ். மாவட்ட பாரவூர்தி சங்கத்தினரின் பணக் கொடுப்பனவுகளை கடந்த முதலாம் திகதி முதல் வழங்கப்படும் என மகேஸ்வரி நிதியத்தினால் அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட வில்லையென பாரவூர்தி சங்க நிர்வாகத்தினர் கவலையுடன் தெரிவித்துள்ளனர். மணல் ஏற்றி பறிப்பதற்காக ஐயாயிரம் ரூபாவை பாரவூர்தி சங்க அங்கத்தவர்கள் வைப்புச் செய்தனர்.
இந்த நிலையில் அந்த வைப்பு பணத்தையும் அதற்கான வட்டியையும், மற்றும் பரவூர்திகளைச் சேவையில் ஈடுபட்ட வேளையில் சேமப் பணமாக செலுத்தப்பட்ட பணத்தையும் அதற்கான வட்டியையும் மீளவழங்க பாரவூர்தி சங்க அங்கத்தவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். பணத்தை மீள வழங்க எந்த வகையான நடவடிக்கைகளையும் மகேஸ்வரி நிதியம் மேற்கொள்ளாத நிலையில் குறிப்பிட்ட சங்க அங்கத்தவர்கள் கடந்த மாத முற்பகுதயில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் வட மாகாண ஆளுநர், பாரவூர்தி சங்கத்தைச் சேர்ந்தவர்களையும் மகேஸ்வரி நிதியத்தைச் சேர்ந்தவர்களையும் அழைத்து கலந்துரையாடினார். இதன் அடிப்படையில் ஜூன் முதலாம் திகதி முதல் குறிப்பிட்ட பணத்தை கட்டம் கட்டமாக வழங்க மகேஸ்வரி நிதியத்தினர் ஒப்புக்கொண்டனர். ஆனாலும் வட மாகாண சபை ஆளுநரின் கூற்றுக்கு ஏற்ப உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லையென பாரவூர்தி சங்க நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.