மத்திய லண்டனுக்கு வரும் டீசல் வாகனங்கள் இனி அதிக நுழைவுக் கட்டணம் செலுத்தவேண்டும்

463
இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பம் வசிக்கும் பக்கிங்காம் பகுதியில் காற்றின் மாசுபாடு உயர்ந்து வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய சட்ட வரம்பின் அனுமதியை விட நான்கு மடங்கு அதிகரித்துள்ள நைட்ரஜன் டை ஆக்ஸைட் அளவுகளுக்கிடையே 87 வயது நிரம்பிய ராணி இரண்டாம் எலிசபெத் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இங்கு நிலவிவரும் அதிகமான மாசுபாடு நிலைகள் குறித்து சமீபத்தில் இங்கிலாந்து அரசினை நீதிமன்ற விசாரணைக்கு ஐரோப்பிய கமிஷன் உட்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். இதனைத் தொடர்ந்து வரும் 2020ஆம் ஆண்டிற்குள், அல்ட்ரா குறைந்த உமிழ்வு மண்டலத்தை(ULEZ) அங்கு உருவாக்க லண்டன் நகர மேயர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார்.

தற்போது மத்திய லண்டனுக்குள் வரும் வாகனங்களுக்கு நெரிசல் கட்டணமாக 11.50 பவுண்டு வசூலிக்கப்படுகிறது. இனி இத்தொகையுடன் சேர்த்து 10 பவுண்டினை மேலும் விதிக்க மேயர் ஜான்சன் முடிவு செய்துள்ளார். ஐரோப்பாவின் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குட்பட்ட யூரோ 6 தரச்சான்று பெற்ற வாகனங்களுக்கு இந்த புதிய வரிவிதிப்பு இருக்காது. ஆனால் கடந்த 2006ஆம் ஆண்டிற்கு முன்னர் வெளிவந்த பெட்ரோல் வாகனங்களும் இந்த அதிகப்படியான வரிவிதிப்பை செலுத்தவேண்டும் என்று அரசு தகவல் தெரிவிக்கின்றது.

அதுபோல் வரும் 2015ஆம் ஆண்டு ஜனவரி 1ந் தேதி முதல் விற்பனை செய்யப்படும். அனைத்து வாகனங்களும் தரக் கட்டுப்பாட்டு சோதனையில் தேறி வரவேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் வெளிவரும் யூரோ டீசல் என்ஜின்கள் எதிர்பார்த்த அளவிற்கு மாசு சேமிப்பு திறனை வெளிப்படுத்தவில்லை.

எனவே தான் இந்த புதிய முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மேயருக்கான சுற்றுச்சூழல் ஆலோசகராகப் பணிபுரியும் மாத்யூ பென்சார்ஸ் தெரிவித்துள்ளார்.

SHARE