மலாலா மீது தாக்குதல் நடத்திய 8 தலிபான் தீவிரவாதிகள் இன்னும் சிறையில் தான் உள்ளனர்: பாக். அதிகாரிகள்

325
பெண் கல்விப் போராளி மலாலா மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 8 தலிபான் தீவிரவாதிகள் வேறு பல வழக்குகளில் இன்னும் சிறையில் தான் உள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண் கல்வியை ஆதரித்தும், ஊக்குவித்தும் பிரசாரம் செய்துவந்த மலாலா தனது 11-வது வயது முதல் பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து வந்தார்.

பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மின்கோரா நகரில் அவர் வசித்தபோது தலிபான் தீவிரவாதிகள் பெண் குழந்தைகள் கல்வி பெறுவதை தடுக்கிறார்கள் என்று பி.பி.சி. வானொலியின் உருது சேவை நிகழ்ச்சிக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். ஒரு சிறுமி தனது நாட்டின் தீவிரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தது உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.

இதனால் ஆத்திரமடைந்த தலிபான் தீவிரவாதிகள் 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி பள்ளிக் கூடத்துக்கு மலாலா பஸ்சில் சென்றபோது அவரை துப்பாக்கியால் சுட்டனர். தலையில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவர் இங்கிலாந்தின் பிரிமிங்காம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்த மலாலா தற்போது பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார். இங்கிருந்தவாறே மலாலா அறக்கட்டளை என்னும் ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் பாகிஸ்தான், நைஜீரியா, ஜோர்டான், சிரியா, கென்யா நாடுகளில் வாழும் பெண்குழந்தைகளின் கல்விக்காக சேவை செய்து வருகிறார்.

தற்போது 17 வயது சிறுமியாக இருக்கும் மலாலா மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக 10 தலிபான் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மூடிய அறையில் சுமார் மூன்றாண்டு காலமாக நடத்தப்பட்ட இந்த வழக்கில் 10 குற்றவாளிகளுக்கு தலா 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் செய்திகள் வெளியாகின.

ஆனால், இந்த வழக்கில் 2 பேருக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மீதி 8 பேருக்கு எதிராக குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லை என விடுதலை செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இங்கிலாந்தின் பிரபல நாளேடான ‘டெய்லி மிரர்’, மலாலா கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்ற 10 பேரையும் பேட்டி காண முயன்றபோது, இவர்களில் இருவர் மட்டுமே பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மை தெரிய வந்தது.

இந்நிலையில் ரகசியமாக விடுதலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட 8 தீவிரவாதிகளும் வேறு பல வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும், அந்த வழக்கு விசாரணைகளுக்காக அவர்கள் இன்னும் சிறையில் தான் உள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

SHARE