இலங்கையரசினைப் பொறுத்தவரையில் நாட்டின் புலனாய்வினை பலப்படுத்த தவறிவிட்டது என்று இராணுவ ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ள அதேநேரம், மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆபத்து ஏற்படப்போகின்றது என்பதை புலனாய்வாளர்கள் அறிந்தார்களா என்ற விடயம் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிமாற்றம் தொடர்பாகவும், யார் யார் கட்சியிலிருந்து விலகப்போகின்றார்கள் என்பது தொடர்பாகவும், நாட்டில் மஹிந்த ராஜபக்ஷவினால் தெரிவு செய்யப்பட்ட பாதுகாப்பு செயலர்(கோத்தபாய ராஜபக்ஷ) பெரும் தவறிழைத்துவிட்டார் என்றே கூறவேண்டும்.
உலக வரலாற்றில் 200ற்கு மேற்பட்ட நாடுகள் உள்ளடக்கப்பட்டும், ஆயிரம் கோடியினைத் தாண்டி மக்கள் சனத்தொகை காணப்படும் நிலையில் அமெரிக்காவின் 52 மாநிலத்திலும் 52 விசேடப் புலனாய்வு அணியினர் செயற்பட்டுவருகின்றனர். அதனை விட ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலனாய்வுப் பிரிவினர் காணப்படுகின்றனர். ஒருநாடு இராணுவ மற்றும் அரசியல் ரீதியாக பின்னடையாதிருப்பதற்கும், அந்நாட்டின் அரசியல் பின்நோக்கி செல்லாதிருப்பதற்கும் அடித்தளமாக இந்த புலனாய்வுப் பிரிவினரே செயற்பட்டு வருவது வழக்கம்.
200ற்கு மேற்பட்ட நாடுகளிலும் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட புலனாய்வுப் பிரிவினர்கள் உள்ளனர். இவற்றுள் ஊஐயு, ரோ, ஸ்கொட்லாண்ட் (24 மணிநேர சேவை) போன்ற சில புலனாய்வு அமைப்புக்கள் முன்னணி வகிக்கின்றன. உதாரணமாக விடுதலைப்புலிகளுடைய இராணுவக் கட்டமைப்பும், அவர்களுடைய போராட்டமும் பின்னடைவதற்குக் காரணமாக அமையப்பெற்றது பொட்டம்மான் என்றே கூறப்படுகின்றது. அவரே விடுதலைப்புலிகளின் புலனாய்விற்கு பொறுப்பாகவிருந்தார். விடுதலைப்புலிகளின் புலனாய்வின் பெயர் டெசி என்பதாகும்.
1989ம் ஆண்டு தொடக்கம் 2005ம் ஆண்டுவரையும் விடுதலைப்புலிகளின் டெசி சிறந்தமுறையில் செயற்பட்டது. பின்னர் அதன் நிர்வாகம் கே.பியிடம் கையளிக்கப்பட்டவுடன் அவர் கோட்டைவிடத் தொடங்கினார். இதனால் டெசி காட்டிக்கொடுக்கப்பட்டு, இப்புலனாய்வினர்கள் இராணுவத்தினரிடம் உள்வாங்கப்பட்டு இறுதியில் விடுதலைப்புலிகளின் போராட்டம் எவ்வாறு நிறைவடைந்தது என்ற வரலாறு இருக்க, இலங்கையில் 59 நாடுகள் தமது புலனாய்வு நடவடிக்கைகளை நிறுவனங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தி வந்துள்ளன.
புனர்நிர்மானம், அபிவிருத்திகள், சுகாதார சேவைகள், புனர்வாழ்வு, மனித உரிமைகள் இன்னும் பல மனித நேய செயற்பாடுகளுடாக பலகோடி பெறுமதியான பணத்தினை செலவழித்து இவர்களுடைய புலனாய்வு நடவடிக்கைகளை இலங்கை மீது மேற்கொண்டு வருகின்றன. இதில் முக்கியமாக உலகப்போர் இடம்பெறும் பட்சத்தில் அமெரிக்கா, சீனா, இந்தியா இந்த மூன்று நாடுகளுக்கும் இலங்கையின் திருகோணமலைத் துறைமுகம் தேவையானதொன்று மட்டுமல்லாது ஆசியப் பிராந்தியத்தில் இலங்கையின் கடற்பரப்;பினூடாக போக்குவரத்துக்கள் முக்கியம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றது.
ஆகவே தனது புலனாய்வு நடவடிக்கைகளை இந்த மூன்று நாடுகளும் தீவிரப்படுத்தி மஹிந்தவினுடைய சர்வாதிகார ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான திட்டத்தினை சந்திரிக்காவிற்கு வகுத்துக்கொடுத்தது. இத்தனை தொடர்புகளும் செய்மதிகளின் ஊடாகவே இடம்பெற்றிருக்கின்றது. இது எவ்வாறு மஹிந்தவின் புலனாய்வினருக்கு தெரியாமல் போனது? ஒரு விடயத்தினைப் பார்க்கின்றபொழுது சீன அரசு தனது புலனாய்வு நடவடிக்கைகளை இலங்கையில் 65 சதவிகிதத்திற்கு மேல் நெறிப்படுத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவினை பணத்திற்கு உள்வாங்கிக்கொண்ட சீன அரசு, காலப்போக்கில் சீனக் கொலணிகள் இலங்கையில் உருவாவதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.
இவ்வாறு செல்வதன் ஊடாக பாராளுமன்றத்தில் சீனப் பிரஜைகள் அங்கம் வகிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு, அவர்கள் நிரந்தர இலங்கை குடிவாழ் மக்களாக மாற்றப்படுவார்கள். தற்பொழுது சீன வானொலி, சீனக் கலாசாரம், சீன சுப்பர் மார்க்கெட் என்று இலங்கையில் இந்த புலனாய்வுப் பிரிவினர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதனை தற்போதைய அரசு அபிவிருத்தி என்று நினைத்து இலங்கையரசினை விற்கும் அளவிற்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளது. இவற்றினை நெறிப்படுத்த சர்வாதிகார ஆட்சிமுறையே உகந்தது என சீன அரசு மஹிந்தவிற்கு மூளையைச் சலவைச்செய்திருக்கின்றது.
ஆசியப்பிராந்தியத்தில் அபிவிருத்தி அடைந்த நாடுகளுள் ஒன்றாக இலங்கையை மாற்றுவோம் என்ற நயவஞ்சக பேச்சுக்கு அடிபணிந்ததன் விளைவு, பக்கபலமாக பார்த்துக்கொண்டிருந்த இந்தியாவும், அமெரிக்காவும் தனது தீவிர புலனாய்வின் நடவடிக்கையினால் இலங்கையரசின் ஆட்சியை தங்களது புலனாய்வு நடவடிக்கையின் மூலம் மாற்றம் பெறச் செய்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது புலனாய்வுக் கட்டமைப்பினை பலப்படுத்துவதன் ஊடாகவே எதிர்வரும் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர, மஹிந்த அவர்கள் புலனாய்வினை செய்ய ஆரம்பிப்பாராகவிருந்தால் சர்வதேசக் கூண்டில் சிறைக்கைதியாக அடைக்கப்படுவது நிச்சயம். இன்னும் சர்வதேச நாடுகள் மஹிந்தவிற்கு எதிராக சூழ்ச்சிகள் செய்கின்றன. இவை என்ன என்பதை புலனாய்வினர் அறியாதிருப்பது கவலைக்குரிய விடயமே.
யுத்தக் குற்றங்களுக்கு காரணம் மஹிந்தவும் அவரது குழுக்களும் என சர்வதேசத்திற்குத் தெரியும். ஆனால் அடுத்தடுத்து என்ன நிகழப்போகின்றது என்பது தெரியாது. மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சீன அரசு கைகொடுக்கும் என நம்புகின்றார்;. புலனாய்வுக் கட்டமைப்பினை பலப்படுத்துவதே மஹிந்த சிந்தனையை தொடர்ந்து கொண்டுசெல்வதற்கு பக்கபலமாக இருக்கும். அதனை விடுத்து கட்சிகளை பழிவாங்கும் எண்ணத்தில் செயற்படுவாராக விருந்தால் மஹிந்தவின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்பது திட்டவட்டமான உண்மை.
THINAPPUYAL NEWS