முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் 2.2 ட்ரில்லியன் டொலர் (18பில்லியன் டொலர்) சொத்துக்களை பதுக்கி வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் தகவல்களை திரட்டி வருவதாகவும் நான்கு நாடுகளின் உதவியுடன் இந்தச் சொத்துக்களை முடக்குவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பிட்டகோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையின் அரச சொத்துக்களை கொள்ளை யடித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் பிரதமராக வேண்டுமென ஆசைப்படுகிறார். இவர்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு மீண்டும் அரசியலில் ஈடுபட வாய்ப்புகளை வழங்கக் கூடாது.
ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் அரச சொத்துக்களை கொள்ளையடித்து பல பரம்பரையினர் வாழும் அளவுக்கு வெளிநாடுகளில் சொத்துக்களை பதுக்கி வைத்துள்ளனர். இவற்றை எண்களில் தெரிவிக்க முடியாத அளவில் காணப்படுகின்றது – என்றார்.
இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
முன்னர் 5 பில்லியன் டொலர் சொத்துக்கள் இருந்ததாகவும், தற்போது 18 பில்லியன் டொலர்கள் சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் இவற்றில் உண்மையில்லை என்று மகிந்த கூறியுள்ளார்.