மாணவி வைத்து நள்ளிரவில் பூஜை: 4 பேர் கைது.

450
 

திருவண்ணாமலையில் நிலத்தில் புதையல் எடுக்க மாணவியை வைத்து நள்ளிரவில் பூஜை செய்த 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த பெலாசூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் என்ற விவசாயி, பணக்காரராக வேண்டும் என்று ஆசைப்பட்டு கேரளாவுக்கு சென்று ஒரு மந்திரவாதியை சந்தித்துள்ளார்.

அப்போது லட்சுமணன் நிலத்தில் புதையல் இருப்பதாகவும், அதை எடுக்க லட்சுமணனின் மூத்த மகளை குழியில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்றும் மந்திரவாதி கூறியிருக்கிறார்.

அதன்படி நிலத்தில் புதையல் எடுப்பதற்காக, நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு விளாப்பாக்கம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பெரிய குழிதோண்டி அதில் தற்போது 12ம் வகுப்பு படித்து வரும் லட்சுமணனின் மூத்த மகளை பாயை விரித்து படுக்கவைத்து மந்திரவாதி பூஜை செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது பக்கத்து நிலத்தை சேர்ந்தவர்கள், அங்கு வந்துள்ளனர். அவர்களை அங்கு வரவிடாமல் தடுத்து, மீறி வந்தால் மந்திரம் ஓதி ஒழித்துவிடுவோம் என்று பூஜை நடத்தியவர்கள் மிரட்டி உள்ளனர்.

உடனே அவர்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் கவிதா, கிராம உதவியாளரை அனுப்பி பார்த்தபோது அங்கு இளம்பெண்ணை குழியில் படுக்க வைத்து பூஜை செய்தது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் இதுகுறித்து போளூர் பொலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று காலை அதுபற்றி விசாரணை நடத்தியபோது நிலத்தில் புதையல் எடுப்பதற்காக பூஜை செய்த மந்திரவாதி போளூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், கேரள மந்திரவாதி ரெகி, நிலத்தின் உரிமையாளர் லட்சுமணன் உள்பட 4 பேரை பொலிசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE