யாழ் நகரில் தற்பொழுது போதைப் பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட மாவா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் யாழ் நகரப் பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாதாரணமான கடைகளில் கூட மிகச் சாதரணமாக விற்பனை செய்து வருவதாக நேரில் கண்டோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தடுப்பதற்கு உரியவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இப் பொதைப் பொருள் அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களும் இளம் சந்ததியினரும் பாதிப்புக்குள்ளாவதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் மல்லாகத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர் குறித்த போதைப்பொருளைப் பயன்படுத்திய நிலையில் பிடிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மாணவர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக பல்வேறு முறைகளில் போதைப் பொருள் விநியோகம் இடம்பெற்று வருகின்றமை பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையில் நாடு சுமூகமான முறையில் இருப்பதாக பேசப்பட்டு வரும் இந்த நிலையில் தற்பொழுது தமிழர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனையை அதிகரிக்கச் செய்து அவர்கள் மீது வேண்டுமென்று காலாச்சார சீரழிவுகளை திணிப்பதாக கல்விமான்கள் குற்றம் சுமத்துகின்றனர்.