
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,296 மாற்றுத்திறனாளிகள் உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகத்தினால் வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தை அடுத்து, மாவட்ட அரசாங்க அதிபரிடம் எமது செய்திப் பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போதே இந்த விடயத்தை அவர் உறுதிப்படுத்தினார்.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள பகுதியில் பல்வேறு தேவையுடைய மக்கள் வாழ்ந்து வருவதாக சுட்டிக்காட்டிய அரசாங்க அதிபர்,
குறித்த மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களுக்கு பொதுவான உதவித் திட்டங்கள் வழங்கும் போதும், அடிப்படை உதவித் திட்டங்கள் வழங்கப்படும் போதும் மாற்றுத் திறனாளிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் கூறினார்.
இந்த நிலையில், கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 444 மாற்றுத்திறனாளிகளும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 707 மாற்றுத்திறனாளிகளும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 311 மாற்றுத்திறனாளிகளும் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 443 மாற்றுத்திறனாளிகளும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 316 மாற்றத்திறனாளிகளும், வெலிஓயா பிரதேச செயலர்பிரிவில் 75 மாற்றுத்திறனாளிகளும் என மொத்தமாக 2,296 மாற்றுத்திறனாளிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளதாக குறித்த புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்படுகின்றது.