சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொலிஸாருக்கு, கல்கிஸ்ஸ நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ நீதவான் மேலதிக மாவட்ட நீதவான் மொஹமட் சஹாப்டீன் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
லசந்த படுகொலை குறித்த வழக்கு விசாரணைகள் அண்மையில் கல்கிஸ்ஸ நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அண்மையில் கடந்த அமைச்சரவையின் முக்கிய அமைச்சர் ஒருவர் புலனாய்வுப் பிரிவினரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொள்ளுமாறு லசந்தவின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதவானிடம் கோரியுள்ளனர்.
லசந்த படுகொலை சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்ட நீதவான் எதிர்வரும் மார்ச் மாதம் 20ம் திகதிக்கு வழக்கு விசாரணைகளை ஒத்தி வைத்துள்ளார்.
லசந்த படுகொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிற்கு தொடர்பு உண்டு என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.