வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு! வாபஸ் பெற விக்னேஸ்வரன் சம்மதம்

436
வடமாகாண பிரதம செயலர் வழக்கு! முதலமைச்சருக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு! வாபஸ் பெற விக்னேஸ்வரன் சம்மதம்
வடமாகாண பிரதம செயலர் மற்றும் அவரது பணியாளர்களுக்கு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அனுப்பிய சுற்றறிக்கையை, உயர்நீதிமன்றம் இன்று நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சரின் இந்த சுற்றறிக்கை தமது அடிப்படை உரிமையை மீறுவதாக, வடமாகாண பிரதம செயலர் விஜயலட்சுமி ரமேஸ் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை மாகாண  பிரதம செயலரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக,  பிரதம  நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வு அறிவித்துள்ளது.

தனது பணிகளில் முதலமைச்சர் தலையீடு செய்வதாகவும், தன்னைப் பதவியில் இருந்து நீக்க அவர் முனைவதாகவும், பிரதம செயலர் குற்றம்சாட்டியிருந்தார்.

தன்னைப் பதவியில் இருந்து நீக்க முயற்சிப்பதாக  பிரதம செயலரின் குற்றச்சாட்டுத் தொடர்பாக, தேசிய நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு, வரும் 28ம் திகதி தீர்வு ஒன்றை நீதிமன்றத்துக்கு முன்மொழியுமாறும் வடமாகாண முதலமைச்சருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் வட மாகாணத்தின் தலைமைச் செயலாளர் விஜயலட்சுமி ரமேஷுக்கு தான் வழங்கியிருந்த உத்தரவுகளை வாபஸ் பெறுவதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வழங்கிய உத்தரவுகள் காரணமாக தனது மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டி தலைமைச் செயலர் விஜயலட்சுமி ரமேஷ் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முதலமைச்சர் தனது உத்தரவுகளை வாபஸ் பெறத் தயாரென அவர் சார்பாக ஆஜரான வழக்குரைஞர் சுமந்திரன் தெரிவித்தார்.

தலைமைச் செயலரும் முதலமைச்சரும் இந்த விவகாரத்தை சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதையே நீதிமன்றம் விரும்புகிறது என தலைமை நீதிபதி கூறியதை அடுத்து இது நடந்ததாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோமி தயாசிறி கூறினார்.

இதேவேளை தலைமைச் செயலரை நீக்குவதென்றாலும் இடமாற்றம் செய்வதென்றாலும் அதனை சுமுகமாக மேற்கொள்ள வேலைத்திட்டம் ஒன்றை வழங்குமாறு நீதிமன்றம் கோரியுள்ளதாக முதலமைச்சர் சார்பில் ஆஜரான வழக்குரைஞ்சர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தான் வட மாகாணத்தை விட்டு வெளியே செல்ல வேண்டுமானால் முதலமைச்சரின் முன்னனுமதியைப் பெறவேண்டுமென நிபந்தனை விதித்திருந்த முதலமைச்சரின் உத்தரவு தனது அடிப்படை உரிமையை மீறும் செயலென தலைமைச் செயலர் விஜயலட்சுமி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 

SHARE