இயற்கை அனர்த்தம் காரணமாக கடந்த 29.10.2014 அன்று பதுளை கொஸ்லந்த மிரியபெத்த பெருந்தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வுடன் இன்று (31.10.2014) அவரது காரியாலயத்தில் நடைபெற்றது.
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வகைகள், உடுதுணிகள், போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர், பிஸ்கட்-பால்மா வகைகள், சவர்க்கார வகைகள், பற்பசை-பற்தூரிகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்குவதற்கு வர்த்தக நிலையங்கள், அரச அரசசார்பற்ற நிறுவனங்கள், சமுக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரது உதவியை கோரியுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு,
இன்று (01.11.2014) உங்கள் வர்த்தக நிலையங்கள், இல்லங்கள் தேடிவரும் நிவாரணப்பொருள்களை சேகரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவினரிடம், உங்களால் முடிந்தவரையான குறித்த அத்தியாவசிய பொருள்களை வழங்கி உதவுமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேகரிக்கப்படும் நிவாரணப்பொருள்கள் பாதிக்கப்பட்ட மக்களின் இருப்பிடங்களுக்கே நேரில் சென்று, வவுனியா மாவட்ட மக்கள் சார்பான குழுவினால் கையளிக்கப்படவுள்ள அதேவேளை, அனர்த்தத்தினால் உயிரிழந்த உறவுகளுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்ச்சியும் எதிர்வரும் வாரம் வவுனியாவில் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் வடமாகாணசபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, ம.தியாகராசா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உபதலைவர் து.ரவி, உறுப்பினர்களான க.பரமேஸ்வரன், பா.பார்த்தீபன், ப.தர்மலிங்கம், இரா.இராஜசேகரம், செட்டிக்குளம் பிரதேசசபை உறுப்பினர்களான சு.ஜெகதீஸ்வரன், சி.சிவகேதீஸ்வரன், கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.பி.நடராஜா, முன்னாள் உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம், சமூகசேவையாளர் க.பவான் மற்றும் மாவட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநர் சங்க உபதலைவர், வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர், வர்த்தகர்கள், சமூகசேவையாளர்கள், சமுக நலன்விரும்பிகள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.