அதர்மம் அழிந்தால் மட்டுமே தீபத் திருநாள் அர்த்தம் பெறும்……!!
இன்று தீபாவளித் திருநாள். நரகாசுரன் எனும் அசுரனை வதம் செய்து தர்மம் நிலைநாட்டப்பட்ட நாள்.
இந்நாள் தீபங்கள் ஏற்றப்பட்டு ஒளிமயமான நாளாகப் போற்றப்படுவதன் அர்த்தமாக தீபாவளித் திருநாள் உலகு வாழ் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.
அதர்மம் என்பது இருள் மயமானது. தர்மம் ஒளி மயமானது. இருள் மயமான அதர்மம் தலைவிரித்தாடும் போது அதனை அடக்கி அழித்து தர்மத்தை நிலைநாட்ட வேண்டும்.
அவ்வாறு தர்மம் நிலைநாட்டப்பட்டால், அது மனித சமூகத்துக்கு ஒளிமயமான வாழ்வைக் கொடுக்கும். இந்த அர்த்தத்தை உணர்த்துவதே தீபாவளித் திருநாள்.
ஆக, ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் தர்மத்தைப் பாதுகாக்க பாடுபட வேண்டும். இதற்காக நரகாசுரனை வதம் செய்ய வந்த நாராயணமூர்த்தி போல அவதாரம் எடுத்தல் தேவையன்று.
மாறாக ஒவ்வொருவரும் மனத்தால், மெய்யால், மொழியால் பிறர்க்குத் தீங்கு செய்யாமல் இருந்தால் – தன் வாழ்நாள் முழுமையிலும் தர்மத்தோடு நடப்பது என்று திடசங்கற்பம் கொண்டால் அது போதுமானது.
எனினும் இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்த வரை அவர்கள் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என நினைப்பதாகத் தெரியவில்லை.
எங்கள் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் அளிக்கின்ற வாக்குகளை தர்மத்தைக் காக்கும் வண்ணம் அளித்தால் அதுவே போதுமானதாகும்.
அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
க.வி.விக்னேஸ்வரன்,
முதலமைச்சர்,
வடமாகாணம்.