அதிரடித் தேடுதல் நடவடிக்கை! பருத்தித்துறையில் 5 பேர் கைது

304

யாழ்.பண்ணைப் பகுதியில் உள்ள தனியார் பஸ் நிலையத்தில் 7.5 கிலோ கிராம் கஞ்சாவுடன், இருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொண்ட அதிரடித் தேடுதல் நடவடிக்கையின் மூலம் மேலும் 5 பேர் பருத்தித்துறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மேலும் 5 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது என்று யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொத்தமாக கைது செய்யப்பட்ட 7 பேரையும், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 12.5 கிலோ கிராம் கஞ்சாவையும் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் யாழ்.பண்ணைப் பகுதியில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்வதற்காக புறப்பட்ட பேருந்து ஒன்றில் இருந்து கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களுடன் கஞ்சா விற்பனை தொடர்பில் இருந்த மேலும் பலருடைய தகவல் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

இதன்படி குறித்த நபர்களை அழைத்துக் கொண்டு பருத்தித்துறைப் பகுதிக்குச் சென்ற பொலிஸார் கைது செய்யப்பட்ட நபர்களின் தொலைபேசியில் அவர்களையே உரையாடவைத்து ஏனைய விற்பனையாளர்களை வரவழைத்து கைது செய்துள்ளனர்.

இவ்வாறு பருத்தித்துறையில் வைத்து 5 பேரைக் கைது செய்துள்ளனர். இதன் போது பருத்தித்துறைப் பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு கடத்திச் செல்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 5 கிலோக்கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் கஞ்சா கடத்தல் தொடர்புகளை வேறு யாரும் வைத்துள்ளார்களா என்பது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விசாரணையின் முடிவில் கைது செய்யப்பட்டவர்கள் சான்றுப் பொருட்களுடன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

SHARE