அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன? – ஒரு நேரடி ரிப்போர்ட்!

268

 

அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடங்கியபோதும்…
ஒருவார காலத்துக்குப்பின்னர் நூலிழை நம்பிக்கையில் சிலபல வாக்குறுதிகளை நம்பி கெடுவிதித்து தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்தபோதும்…
090493e9-a8c1-42cb-b486-7770b1093348 b794ad2a-dd5d-4b6b-8bf6-6d1e3cf3b906
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் குதிக்கால் பிடரியில் அடிபட கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கும், அநுராதபுரம் சிறைச்சாலைக்கும், மட்டக்களப்பு சிறைச்சாலைக்கும் ஓடோடிச்சென்றார்கள். ஓட்டம் என்றால் அப்படியொரு ஓட்டம்! இவர்கள் சர்வதேச ஒலிம்பிக்கில், தடகள போட்டிப்பிரிவுகளில் பங்கெடுத்தால் நிச்சயம் பதக்கங்களை அள்ளிக்குவித்து தமிழினத்துக்கு மற்றுமொரு பெருமையை தேடித்தருவார்கள் என்பதில், ‘அவர்களுக்கு வாக்குப்போட்ட ஒவ்வொரு தமிழ்க்குடிமகனும்’ எள்ளளவு தானும் சந்தேகம் கொள்ளவேண்டியதில்லை.
இனி விடையத்துக்கு வருவோம்.
இவர்கள் சிறைச்சாலைகளுக்குள்ளே சென்று, அரசியல் கைதிகளை சந்தித்துப்பேசிவிட்டு வெளியே வந்து, சிறைச்சாலை முற்றத்தில் ஏலவே தயார்நிலையிலுள்ள ஊடகவியலாளர்களிடம் பேட்டி கொடுக்கும்போது, உண்மையைத்தான் (உள்ளே நடந்ததை தான்) பேசுகின்றார்களா? என்றால், ‘இல்லை’ என்பதே உண்மை!
உள்ளே அரசியல் கைதிகள், இவர்களிடம் வெளிப்படுத்தும் தமது கவலைகள், ஏக்கங்கள், வலிகள், இழப்புகள், கோபங்கள், ஆதங்கங்களை அதாவது கைதிகளின் ஆழ்மன உணர்வுகளை இவர்கள் ‘நியாயபூர்வமாக’ ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதேயில்லை. தமது இஸ்டத்துக்கு (தாம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தது பற்றிய நியூஸ் ரீஜ்ஜாக வேண்டும் என்பதை மட்டுமே முழுக்க முழுக்க மனதில் வைத்துக்கொண்டு) கைதிகள் போசாதவற்றையெல்லாம் பேசியதாக, தமது கற்பனைகளை கலந்துகட்டி ஊடகவியலாளர்களிடம் அவிழ்த்து விடுகின்றார்கள்.
கைதிகளின் உணர்வுகளை வெளிப்படுத்தாமல், ‘மீடியா கவரேஜ்’ ஐ நோக்கமாகக்கொண்ட இத்தகைய (வாய்ப்)பேச்சுகள், கைதிகளின் விடுதலைக்கு பலனளிக்குமா? அது யாருக்கு இலாபம் கொடுக்கும்? இதனால் என்ன நன்மை நடந்துவிடப்போகிறது? என்பது பற்றியெல்லாம் உங்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றோம்.
உண்மையில், சிறைச்சாலைக்குள்ளே செல்லும் இவர்கள், வெளியே வரும்போது இறுகி விகாரமடைந்த முகத்துடனேயே வெளியே வருகிறார்கள். உள்ளே நடந்ததை சமாளித்துக்கொண்டு, சும்மா ஒப்புக்கு சிரித்தவாறு முகத்தை வைத்துக்கொண்டு (வைகைப்புயல் பாணியில் எவ்வளவு நேரத்துக்கு தான் அழுகையை கட்டுப்படுத்துறது போலவே நடிக்கிறது) ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கிறார்கள்.
அப்படி என்னதான் உள்ளே நடக்கிறது? கைதிகளிடமே கேட்டுத்தெரிந்துகொண்டோம். வாருங்கள்.  
அதற்கு முன்னர் இந்த அரசியல் கைதிகள் பற்றியும், அவர்களின் அரசியல் அறிவு – தெளிவுநிலை பற்றியும் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர்கள் தினசரி பத்திரிகைகள் முதல் பிரசித்திபெற்ற புத்தகங்கள் வரை ஒன்றையும் விட்டு வைக்காமல் வாசித்து அரசியலையும் – நாட்டு நடப்பையும் நன்கு உய்த்துணர்ந்து விளங்கி வைத்திருக்கிறார்கள். போதாக்குறைக்கு சட்டப்புத்தகத்தையும் கரைத்துக்குடித்து அதன் ஒவ்வொரு பிரிவுக்கும் அப்படியொரு விளக்கம் தருகிறார்கள். அவர்களின் பெரும்பாலான நேரங்கள் வாசிப்பிலேயே செலவிடப்படுகின்றன.
ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளினதும் நடவடிக்கைகளை பின்தொடர்கின்றார்கள். அவர்களது பத்திரிகை அறிக்கைகள் – செய்திகள் ஒவ்வொன்றையும் சேகரித்து பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது ‘நாக்குப்பிடுங்க நாலு கேள்வி கேட்பதற்காக!’
ஆதலால் தம்மை சந்திக்கவரும் ஒவ்வொரு அரசியல்வாதிகளிடமும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அவர்களை கேள்விகளால் பின்னிப்பெடலெடுத்து, நோண்டி நுங்கெடுத்து, கிண்டிக் கிழங்கெடுத்து, காய்ச்சி வறுத்தெடுத்தே அனுப்பி வைக்கின்றார்கள்.
கடந்த 17.11.2015 அன்று கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பிக்கள் மாவை.சேனாதிராசா, ஈ.சரவணபவன், வன்னி எம்.பிக்கள் சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர், பத்து நாட்களாக தொடர்ந்த அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நீராகாரம் வழங்கி முடிவுறுத்துவதற்காக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தபோது,
அவர்கள் மாவை.சேனாதிராசாவிடம் முதல் கேள்வியை இப்படி தொடுத்தார்கள். ‘நீங்க இந்த அரசாங்கத்த இப்பவும் நம்புறீங்களா?’ என்று.
சற்றும் எதிர்பாராத இந்தக்கேள்வியால் நிலைகுலைந்துபோன மாவை.சேனாதிராசா, அந்தக்கேள்விக்கு ‘நாங்க நம்புறம் எண்டும் இல்ல… நம்பாமல் எண்டும் இல்ல…’ என்று, இழுத்து இழுத்து அப்பிடியே தந்தி அறுந்த வீணை போல சுருதியை குறைச்சுக்கொண்டு வந்தார்.
அப்போது குறுக்கிட்ட மற்றுமொரு அரசியல் கைதி: ‘இந்தா ஐயா! நீங்க இந்த அரசாங்கத்த நூறு வீதம் நம்புறதா கொடுத்திருக்கிற பேட்டி’ என்று தினக்குரல் நாளிதழ் ஒன்றை தனது தலைக்கு மேலே தூக்கிப்பிடித்துக் காட்டினார். அந்த பத்திரிகையில் அவர்கள் சுட்டிக்காட்டிய தொடர்புடைய செய்தியோடு மாவை.சேனாதிராசா முகம் முழுக்கவும் சிரித்துக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது நிஜத்தில் கைதிகளுக்கு முன்னால், மாவை.சேனாதிராசாவுக்கு முகம் எல்லாம் இருண்டு கறுத்துப்போய் வீங்கி விகாரம் எடுத்து விட்டது. (மற்ற எம்.பிக்கள் கடைக்கண்ணால் மாவையை பார்த்தவாறு கொடுக்குக்குள் சிரித்தவாறு நின்றுகொண்டிருந்தனர்.)
ஒருவாறு சுதாகரித்துக்கொண்ட மாவை.சேனாதிராசா, ‘தம்பியெல்லே! நானும் அப்ப உங்கள மாதிரித்தான், போராட்டம் எல்லாம் நடாத்தி… ஜெயிலுக்கு எல்லாம் போய்…’ என்று, தனது ஐம்பது வருடகால அரசியல் வாழ்க்கையை தேய்ஞ்சு போன ரெக்கார்ட் பீஸ் மாதிரி சொல்லத்தொடக்க, ‘செத்தமடா சாமி, இதவிட உண்ணாவிரதமிருந்து செத்திருக்கலாம்’ என்று முணுமுணுத்தவாறு அரசியல் கைதிகள் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு கொடுக்குக்குள் சிரிக்கத் தொடங்கி விட்டனர்.
கந்தறுந்து நிற்கிறம். இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை! 
அப்போது அரசியல் கைதி ஒருவர், ‘இதெல்லாம் எங்களுக்கு தெரியும் ஐயா… தெரியும். உங்கள விட நாங்க நிறையவே அநுபவிச்சிட்டம். எங்கட வழக்குக்காக எங்களிட்ட இருந்த நகை நட்டு, காணி பூமி சொத்து துரவு வீடு எல்லாத்தையும் வித்து, கெட்டு குட்டிச்சுவராகி கந்தறுந்து போய் நிற்கிறம். இனி எங்களிட்ட விற்கிறதுக்கு சொத்தோ… வழக்க நடத்துறதுக்கு  பணமோ… இல்ல. எல்லாத்தையும் இழந்து ஏமாந்துபோய் நிற்கிறம்! முன்பொருமுறை எங்கள சந்திச்சு பேச நீங்க வரும்போது, வழக்க நடத்துறதுக்கு வசதியில்லாத அரசியல் கைதிகளின் செலவுகளை கூட்டமைப்பு பொறுப்பெடுத்து நடத்தும் எண்டு சொல்லியிருந்தீயள்? இத்தன நாளைக்கும் எத்தன கைதிகளின்ட வழக்குச்செலவ பொறுப்பெடுத்திருக்கிறீயள்?’ என்று கேட்க,
மாவை.சேனாதிராசா, உடனே முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு, ‘என்னப்பன் நானா? என்ன சொல்லுறீயள்? நான் அப்பிடிச்சொன்னனானா?’ என்று எதுவுமே நினைவில் இல்லாதவர் போல திருப்பிக்கேட்டார். ‘நீங்கள் சொன்னனீயள் ஐயா, அப்ப என்ன சும்மாச்சொல்ல நாங்க என்ன லூசா?’ என்று இன்னுமொரு அரசியல் கைதி உருக்கிப்பேச, மாவை.சேனாதிராசா அப்படியே ‘கப்சிப்’ ஆகிவிட்டார்.
ஒருவருக்கு ஒருவர் என்று தத்தெடுத்திருந்தால் ???
கூட்டமைப்பில கிட்டத்தட்ட 13-16 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருக்கிறீயள். இப்பவும் இருக்கிறீயள். வடக்கு கிழக்கு மாகாணசபையில 40 பேர் வரையில இருக்கினம். நீங்க அத்தனபேரும் ஆளுக்கு ஒருத்தர தத்தெடுத்து வழக்கை நடத்தியிருந்தால், ஒரு வருசத்துக்கு 50 பேர் எண்டு பார்த்தாக்கூட, உள்ள இருக்கிற அத்தின அரசியல் கைதிகளும் இன்டைக்கு றிலீஸ்ஸாகி வெளியால வந்திருப்பம்.’ என்று அரசியல் கைதி ஒருவர் கூறியபோது, ‘தமிழ் – தமிழர் – போராளிகள் – முள்ளிவாய்க்கால் – தியாகங்கள் – மாவீரர்கள்’ இந்த சொல்லாட்சிகளை வரிக்குவரி பயன்படுத்தும் அத்தனை அரசியல் பிரமுகர்களும் உடுத்தியிருக்கும் ‘போலித்தமிழ் தேசிய முகத்திரை’ உரிந்து கிழிந்து தொங்கத்தொடங்கி விட்டதை காணமுடிந்தது.
விக்னேஸ்வரனும் – இந்துமாமன்றமும் துணை!
‘எங்களுக்காக போராடிக்கொண்டிருக்கிற அனைத்து சிவில் சமுக மனித உரிமை, சட்ட அமைப்புகளுக்கும் நாங்க கடமைபட்டிருக்கிறம். விக்கினேஸ்வரன் ஐயாவுடன் தொடர்பிலிருக்கிறம். இந்து மாமன்றத்துடனும் பேசியிருக்கிறம். தயவுசெய்து உண்மையாய் இருக்கப்பாருங்கள். டிசம்பர்-10 அரசுக்கு கெடு விதிச்சிருக்கிறம். அதற்குள்ள அரசாங்கத்தோட பேசி நல்ல தீர்வ பெற்றுத்தரப் பாருங்கள். இந்த அரசாங்கத்துக்குள்ள கையை நனைச்சிருக்கிற உங்களால இது நிச்சயம் முடியும். முடியாட்டி இந்த அரசாங்கத்த தாங்கிப்பிடிக்காம உதறித்தள்ளிட்டு வெளியால வந்து உலகத்துக்கு உண்மைய சொல்லப்பாருங்க. இத நீங்க செய்யத்தவறினால்… வடக்கு கிழக்கு மட்டுமில்ல, மலையகம் என்று நாடு முழுக்கவும் நாங்க போராட்டங்கள நடத்த வேண்டிவரும் என்று அரசியல் கைதிகள் முன்னெச்சரிக்கை செய்தனர்.
‘ஓம்… ஓம்… நாங்கள் நிச்சயம் பேசுவம். பேசி ஒரு முடிவு காணுவம். எங்கள நம்புங்கள்’ என்று உத்தரவாதமளித்த பின்னர், மாவை.சேனாதிராசா முதலாவது ஆளாக, பால்பக்கட்டுகளை வழங்கி உண்ணாவிரதத்தை முடிவுறுத்தி வைத்துவிட்டு, புறப்படுவதற்கு பத்தடி தூரம் நடந்திருப்பார். அப்போது அரசியல் கைதிகள் மற்றைய எம்.பிக்களைப்பார்த்து ‘உவர நாங்க நம்பத்தயாரில்ல. தயவுசெய்து நீங்களாவது முதலமைச்சர் ஐயாவுடன் சேர்ந்து எங்களது விடுதலைக்காக உண்மையாக உழைக்கப்பாருங்கள்’ என்று கோரசாக தெரிவித்தனர்.
தாம் கொண்டு சென்ற உணவுப்பொருட்களை ஒவ்வொரு எம்.பிக்களும் கையளித்த பின்னர் புறப்பட ஆயத்தமாகிய போது, அப்போது, சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, அரசியல் கைதிகளிடம், ‘சம்பந்தன் ஐயா, சேனாதி ஐயா, சுமந்திரன் ஐயா இந்த மூவரும் இருக்கும் வரை ஒரு ஸ்ரெப் கூட முன்னோக்கி நகர்த்த முடியாது. இந்த இனத்தின் விடுதலை என்பது சாத்தியமே இல்லை’ என்று அரசியல் கைதிகளின் கையை இறுகப்பற்றிக்கொண்டு உரைத்தார். அரசியல் கைதிகள் அவரது கருத்தை எவ்வித எதிர்வினைகளும் இன்றி ஏற்றுக்கொண்டு தலையசைத்தனர்.
செல்வம் அடைக்கலநாதனை தனித்து சந்திக்க விரும்புகிறோம்.
இந்த நான்கு எம்.பிக்களும் திரும்பிய பின்னர் நான்கு மணியளவில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு வந்தார். அப்போது அரசியல் கைதிகள் அவரிடம்,
‘நீங்க பாராளுமன்ற தேர்தலில ஜெயிச்சு அரசாங்கத்திடம் பதவி எடுத்த பின்னர் போற இடமெல்லாம், மாலை பொன்னாடை எண்டு வரவேற்று – மரியாதை தூக்கலா இருக்கு. தினசரி பேப்பரில அடிக்கடி பார்க்கிறம். நாங்களும் உங்கள சிறப்பா கவனிச்சு உபசரிச்சு அனுப்ப ஆர்வமா இருக்கிறம். ஆனால் அன்டைக்கு பாதர் விக்டர் சோசை அவர்களோடு வந்தீங்க. இன்டைக்கு முரளி பாதரோட வந்திருக்கிறீயள். தனியா வந்தீங்கள் என்டால் நாங்களும் பிரமாண்டமாய் கவனிச்சு அனுப்புவம் எல்லே’ என்று கூற, செல்வம் அடைக்கலநாதன் எம்.பிக்கு வயித்துக்கும் – தொண்டைக்கும் இடையில இனம் புரியாத ஏதோ ஒன்று உருளுவது போல உணர்வு இருந்ததை அவரது கண்களைப் பார்த்து தெரிந்துகொள்ள முடிந்தது.
தான் அதிகம் கதைக்காமல் பாதர் முரளி அவர்களை அதிகநேரம் கதைக்க விட்டுவிட்டு அமைதியாக இருந்த செல்வம் எம்.பி, நிலைமையை விளங்கிக்கொண்டு சிறிது நேரத்துக்குப்பின்னர் பாதரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டுச்சென்று விட்டார்.
அரசியல் கைதிகளின் ‘கவலை, கண்ணீர், ஏக்கம், வலி, குறைகள், எதிர்பார்ப்புகள், தேவைகள்’ என்று கொடுந்துயரம் நிறைந்த நிஜ வாழ்க்கையை ‘நியாயபூர்வமாக’ வெளிஉலகத்துக்கு இவர்கள், ‘போலி இல்லாமல் – பசப்பு இல்லாமல் – ஏமாற்று இல்லாமல், சுயஇலாப நோக்கங்கள் இல்லாமல்’ வெளிப்படுத்தினால் மாத்திரமே நீதி கிடைக்கும் – வெல்லும் !!!
SHARE