அம்பாறை பொத்துவில் அறுகம்பை அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த 21.5 கிலோ மீற்றர் தூரம் கொண்ட அரை மரதன் ஓட்டப் போட்டியில் ஜேர்மன் பிரஜையான மாகஸ் கோடர் முதலாம் இடத்தை பெற்றார்.
பொத்துவில் அறுகம்பை அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த “கல்விக்காக ஓடுவோம்” அரை மரதன் ஓட்டப்போட்டி நேற்று காலை பொத்துவில் சின்ன உல்லை அல் அக்ஸா வித்தியாலயத்துக்கு முன்னால் ஆரம்பமாகியது.
இப்போட்டியில் ஜேர்மனியரான மாகஸ் கோடர் எக்படர் முதலிடத்தைப் பெற்று 30 ஆயிரம் ரூபா பணப்பரிசைப் பெற்றுக் கொண்டார்.
பொத்துவில் கோமாரி இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் பியல் திசாநாயக்க இரண்டாமிடத்தைப் பெற்று 20 ஆயிரம் பணப்பரிசைப் பெற்றுக் கொண்டார்.
பொத்துவில் தாண்டியடியைச் சேர்ந்த கே.சிறிதரன் 3 ஆம் இடத்தை அடைந்து 15 ஆயிரம் ரூபா பணப் பரிசை பெற்றுக் கொண்டார்.
இப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களான தம்மிக்க பிரசாத், தனுஷ்க குணதிலக்க, பினுர பெர்ணாண்டோ ஆகியோர் வெற்றி பெற்ற மூவருக்கும் பரிசில்களை வழங்கினர்.
இதேவேளை மாணவர்களுக்கான 5 கிலோமீற்றர் ஓட்டப் போட்டியில் எம்.ஏ.எச்.நுஸ்கி அஹமட் 1 ஆம் இடத்தையும், எம்.எஸ்.சஜான் இரண்டாம் இடத்தையும், ஹசான் 3 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர். இப்போட்டியில் 57 பேர் கலந்து கொண்டர். இவர்களில் 28 பேர் முழுத் தூரத்தையும் ஓடி முடித்து ஆறுதல் பரிசில்களை பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முஹர்ரத், பொத்து வில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ரி.எல்.மனாப், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.இஸ்ஸடீன், அறுகம்பை அபிவிருத்தி ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.