அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் தொடரப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்புக்கள் எதுவும் அரசாங்க வைத்தியசாலைகளை சீர்குலைக்காது என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட அரச சேவையின் நிறைவேற்று அதிகாரிகளின் சங்கங்கள் இன்று காலை முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வாகன இறக்குமதிப்பத்திரம் குறித்தே இப் பணிப்புறக்கணிப்பு ஆரம்பித்துள்ளது. விசேட மருத்துவர்கள் சங்கத்தின் அங்கத்தவர்கள் எவரும் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை. நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைப் பிரிவு, நிதி நிர்வாகப்பிரிவு, விபத்துப் பிரிவு, வௌிநோயாளர் பிரிவு உட்பட பல பிரிவுகள் இயங்கி வருகின்றன என மேலும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும் வாகனங்களுக்கான இறக்குமதிப்பத்திரம் குறித்து வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு தேவையற்றதொன்றாகும். இது குறித்து அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்த ஓர் கலந்துரையாடலுக்கு முன்வர வேண்டும். இது குறித்து அவர்கள் கேட்குமிடத்து திறந்த கலந்துரையாடலொன்றுக்கு நான் தயாராகவுள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். –