தற்போது இலங்கை அரசியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற விடயம் புரியாத புதிராகவே உள்ளது.
யார் யாருடைய பக்கம் சேரப் போகின்றார்கள்? என்ன பேசப் போகின்றார்கள் என்பதும் பலத்த எதிர்பார்ப்பாகவே உள்ளது.
அந்த வகையில் நேற்று காலை ரணிலை சந்தித்தவர்கள் மாலை நேரத்தில் மஹிந்தவுடன் இணைந்த சம்பவங்களும் உண்டு. அவர்களுக்கு அமைச்சுப்பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், நல்லாட்சி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அமைச்சரவை முழுவதும் கலைக்கப்பட்டு நேற்று புதிய அமைச்சர்கள் சிலர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.
அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த அனைவரது பதவிகளும் பறிக்கப்பட்ட நிலையில், தமது எதிர்கால அரசியல் பயணம் எப்படி இருக்கப் போகின்றது என்பது பற்றி அனைவரும் சிந்தித்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தனது முகநூலில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை கண்டு பலர் அதிர்ச்சியடைந்துள்ளதுடன், பதில் பதிவையும் இட்டுள்ளனர்.
இதில் “என் வரலாற்றையும், என்னையும் மறந்தோருக்கும் நான் யாரென இப்போ தெரிந்திருக்கும்….
…ஆனால் அரசியல் எனக்கு சலிக்கிறது. விடைபெற அழைக்கிறது!!!” என்ற பதிவை மனோ கணேசன் இட்டுள்ளார்.
எனினும் இந்த பதிவிற்கு பலர் “நீங்கள் அரசியலை விட்டு செல்லாதீர்கள்” என்று பதில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.