அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்த்து இராவணா பலய அமைப்பு ஆர்ப்பாட்டம்

306

 

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இராவணாபலய அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்துள்ள இராவணா பலய அமைப்பின் பிரதிநிதிகள், ஜனாதிபதிக்கு மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் கைதிகள் என கூறப்படுவோர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனவும், அவர்களை விடுதலை செய்வது தவறு எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலி அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுதலை செய்வதன் ஊடாக நாட்டை மீண்டும் பாதாள குழிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக இராவணா பலய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி செயலாளருக்கும், இராவணா பலய அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் கூறினார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தவறு: இராவணாபலய அமைப்பை சந்திக்க ஜனாதிபதி அனுமதி

இராவணாபலய அமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்றை எதிர்வரும் 27ஆம் திகதி நடாத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தவறானது என தெரிவித்து இராவணாபலய அமைப்பு  ஜனாதிபதி செயலகத்திற்கு இன்று முற்பகல் சென்றிருந்தது.

தமிழ் அரசியல் கைதிகள் என கூறப்படுவோர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நேரடி தொடர்பு வைத்திருந்தவர்கள் எனவும், அவர்களை விடுதலை செய்வது தவறு எனவும் இராவணாபலய அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனால் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவது பிழையான ஒரு விடயம் என அவர்கள் வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு மகஜரொன்றையும் கையளிக்க திட்டமிட்டிருந்தனர்.

எனினும், ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு இன்று மறுப்பு தெரிவித்த போதிலும், எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 2.30க்கு ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மேலதிக செயலாளரின் கையொப்பத்துடன் இந்த கடிதம் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE