அரசியல் கைதிகள் புனர்வாழ்வு பெறத் தயார் – கைதிகளை பார்வையிட்டார் வடக்கு போக்குவரத்து அமைச்சர்

178
கடந்த 23 ஆம் திகதி அனுராதபுரம், மகசின், வெலிக்கடை ஆகிய சிறைகளில் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் சிலர் தங்களது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அனுராதபுரச் சிறைச்சாலையில் இருந்த இரு கைதிகள் தங்களது உண்ணாவிரதத்தை கைவிட்டிருக்கும் அதே வேளையில், மகசின் சிறைச்சாலையிலும், வெலிக்கடைச் சிறைச்சாலையிலும் 14 தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக தமது உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.
இச் சூழ்நிலையில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் இன்றைய தினம் 02-03-2016 காலை 11 மணியளவில் மேற்படி இரு சிறைச்சாலைகளுக்கும் விசேட விஜயம் மேற்கொண்டு உண்ணாவிரதம் இருந்த கைதிகளையும் சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருப்பது தெரியவருகின்றது.
மேற்ப்படி சந்திப்பின்போது உண்ணாவிரதக் கைதிகள் அமைச்சரிடம் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக சில மாதங்களுக்குமுன்னர் ஒரு சில அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் தமிழ் அரசியல் கைதிகள் புனர்வாள்விற்கு  செல்ல விரும்பவில்லை என்று கருத்துப்பட மேதகு ஜனாதிபதியிடம் தெரியப்படுத்தியிருக்கின்றார்கள். ஆனால் உண்மை நிலை அதுவல்லவென்றும் தாங்கள் எப்பொழுதும் புனர்வாள்விற்கு செல்ல தயாராக இருக்கின்றோம் என்றும், போராட்டத்தில் சம்பந்தப்படாத ஒருசிலர் தமக்கு புனர்வாழ்வு தேவையில்லைஎன்றும், தாம் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகவும், இந்த உண்மை நிலைப்பாட்டினை உரிய இடத்திற்கு கொண்டுசெல்லுமாறு அமைச்சரிடம்  கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடயங்கள் பொருத்தமான நடவடிக்கைகளின் ஊடாக விரைவாகக்  கையாளப்படவேண்டும் என்றும், விரைவாக குடும்பங்களுடன் மீள இணைக்கப்பட்டு, இயல்பு வாழ்விற்கு திரும்புவது அவசியமானதொன்றென்றும் தெரிவித்திருக்கின்றார்.
குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும், போராட்டத்தோடு தொடர்புபடாத பொதுமகன் என்ற அடிப்படையிலும் பிரிக்கப்பட்டு கையாளப்படுதல்வேண்டும், இதில் போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட அரசியல் கைதிகள் பலர் கைதுசெய்யப்பட்டு  5, 10, 15, 20 வருடங்களுக்கு மேலாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு தற்போதைய அரசு பொதுமன்னிப்பு வழங்க முன்வரவில்லை என்பதும் நாம் எல்லோரும் அறிந்த விடயமாகும். அதே நேரம் சட்டத்தின் பால் பிணை விடுவதென்பதும் முடியாத காரியமாக இருக்கின்றது, ஆகவே மேற்ப்படி வகைப்படுத்தப்பட்ட கைதிகள் குடும்பங்களோடு மீள இணையவேண்டுமெனில் புனர்வாழ்வு ஒன்றே தற்போது பொருத்தமானதும் அரசினால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகவும் காணப்படுகின்றது. போராட்டத்தோடு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத ஒரு சிலர் கைதுசெய்யப்பட்டு அவர்களும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு பொது மன்னிப்போ, புனர்வாள்வோ அல்லது பிணையோ பொருத்தமற்ற ஒன்றாக காணப்படுவதோடு, இவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டியவர்கள் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாது வெலிக்கடை, அனுராதபுரம், வவுனியா ஆகிய சிறைகளில் இருக்கும் 04 பெண் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெண்கள் என்ற அடிப்படையில் மிக விரைவாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை மேதகு ஜனாதிபதியிடம் முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அவர்களோடு உரையாடியவேளை, அவர்கள் அளவுக்கதிகமாக மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதனையும், பல வருடங்கள் சிறையில் துன்பங்களை அனுபவித்ததன் வாயிலாக விரக்த்தியின் உச்சநிலைக்குச் சென்றிருக்கிறார்கள் என்பதனையும், இவர்கள் மட்டில் அரசியல் வாதிகள் கூட, சென்று பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தோடு இருப்பதையும் அவதானிக்கமுடிவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இரண்டு பெண் தமிழ் அரசியல் கைதிகள் தங்களது பிள்ளைகளை நீண்டகாலமாக பார்க்காமல் இருப்பதனால்  விரக்த்தியின் உச்ச நிலைக்குச் சென்று தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சென்றுள்ளனர், இச் செய்தியைக் கேட்டுத் தாம் மிகவும் வேதனை அடைந்ததோடு, அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களது விடுதலைக்காக துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இறுதியாக அவர் தெரிவிக்கையில், தற்போது தமிழ் அரசியல் கைதிகளில் ஆண்கள் 164 பேரும் பெண்கள் 04 பேருமாக மொத்தமாக 168 கைதிகளின் விடுதலை தொடர்பிலும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேதகு ஜனாதிபதி அவர்களை தொடர்புகொள்ளப் போவதாகவும், முடியுமானால் உண்ணாவிரதம் இருக்கும் உறவுகள் தமது உண்ணாவிரதத்தை ஒத்திவைக்குமாறு அன்பாக கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
b2d9529e-7f2a-482a-ba52-93a3f652f971
SHARE