50 மில்லியன் ரூபாய் காசை பெற்றுக்கொண்டே அகில இலங்கை மக்கள் காங்ரஸ் இந்த அரசாங்கத்தினை ஆதரித்தார்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ.எஸ். சுபைர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
எனது முயற்சியால் எதிர்வரும் சில தினங்களில் ஒரு தனவந்தரின் உதவியுடன் இஸ்லாத்தை ஏற்ற 300 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை செய்ய உள்ளேன்.
அத்துடன் நாங்கள் வெறுமனே நாட்டில் உறங்கி கொண்டிருந்தால் எதனையும் சாதிக்க முடியாது எமது முயற்சிகள் மும்முரமாக இருக்கின்ற போது அது வெற்றியளிக்கும் என்றார்.
இஹ்லாசுடனான எனது அரசியல் பயணத்தில் யார் பிழை விட்டாலும் சுற்றிகாட்ட தயங்கமாட்டேன். அத்துடன் நான் அரசியலில் சோம்பரியாக இருக்க மாட்டேன் .
இந்த நல்லாட்சி அரசை நிறுவக் காரணம் சிறுபான்மை மக்களே. இந்த ஜனாதிபதியை முஸ்லிம், தமிழ் மக்களாகிய நாங்கள் தான் நிறுவினோம்.
ஆனால் இந்த அரசில் அமைச்சை அலங்கரிக்கும் எமது முஸ்லிம் தலைமைகள் எதனை நமக்காக பெற்று தந்துள்ளார்கள்? சம்பூரின் பிரச்சினையை தமிழ் கூட்டமைப்பு நாசூக்காக காய் நகர்த்தி முடித்து கொடுத்துள்ளார்கள்.
இராணுவ முகாம்கள், அவர்களின் காணிகளின் விடுவிப்பு என அவர்கள் சேவையை சரியாக செய்கிறார்கள்.
எமது முஸ்லிம் தலைமைகளின் சாதனை என்ன? ஒன்றுமில்லை… மக்கள் தூக்கத்தை கலைத்து கேள்வி கேட்காமல் இருந்தால் இவர்கள் எங்களை ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
எமது பிரதேசத்தில் 50 ஆயிரத்திற்க்கும் மேலதிகமான யுத்தப்பாதிப்பு குடும்பங்களுக்காக அமைச்சர் ரிசாத்திடம் நான் பலமுறை போராடியிருக்கிறேன்.
ஆனால் அவர் அவரது அமைச்சை கைபற்றுவதிலையே குறியாக இருக்கிறார். மீள்குடியேற்ற அமைச்சை ஏன் இவர் எடுப்பதற்க்கு தயங்குகிறார்?
அந்த அமைச்சை எடுத்து மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்க்கு தயங்கும் இவர் தற்போதைய அமைச்சை பேரம் பேசி பெறுவதின் மர்மம் என்ன?
நுரைச்சோலை வீட்டுதிட்டங்களினை கையளிக்காத தலைமைகள் தான் நமது தலைமைகள். அரசியலமைப்பின் சீர்திருத்த பிரச்சினை தற்போது ஓங்கி ஒலித்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் யார் தேசிய தலைமை என சண்டைபிடிக்கும் எமது தலைமைகள் செய்வது என்ன?
தமிழ் மக்கள் இந்த விடயத்தில் உசாராக இருக்கிறார்கள். இது போன்றே தேர்தல் மறுசீரமைப்பு பிரச்சினையும் இருக்கிறது.
நல்லாட்சி அரசை நிறுவ நான் சார்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 50 மில்லியன் ரூபாய் காசை வாங்கிக்கொண்டே இந்த அரசை ஆதரித்தார்கள்.
அதிலும் கட்சியின் தவிசாளர் 15 மில்லியனை சண்டை போட்டு பறித்தார் என்பதை பகிரங்கமாக இங்கு கூறிவைக்கிறேன்.இவர்களுக்கு நல்லாட்சி அரசில் எந்த மரியாதையுமில்லை.
அவர்களால் இந்த கூற்றை மறுப்பதற்கு சவால் விடுக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார் .