அரச உயர்பதவிகளை அலங்கரிப்பவர்களாக இன்றைய பெண்கள் திகழ்கின்றார்கள்: சிறீதரன் எம்.பி

296

கிளிநொச்சி சென்திரேசா மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கடந்த 15ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பாடசாலை முதல்வர் செல்வி. அன்ரனி சாந்தா தலைமையில் கல்லூரி மைதானத்தில் சிறப்புற இடம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இன்றைய சூழலில் எமது பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக திகழ்கின்றார்கள்.

பெண்களைப் பாரமாகவும், சுமையாகவும் கருதுகின்ற சமூகத்தின் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி பெண்கள் இன்று உலக அரங்கிலே அதியுயர் பதவிகளை அலங்கரித்து வருகின்றனர்.

வெறுமனே கல்வியில் மட்டுமல்ல விளையாட்டிலும், வீரதீரச்செயல்களிலும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருவதை நாங்கள் காண்கிறோம் எமது உரிமைக்கான போராட்டத்திலும் ஆண்களுக்கு சமனானவர்களாக இருந்து தமது பலத்தை நிர்ணயித்த வரலாற்றுச் சம்பவங்களை எங்கள் மண்ணிலே கண்டோம்.

கிளிமண்ணின் புகழ் பெற்ற பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களாகிய நீங்களும் எம்மண்ணுக்குரிய மகத்துவத்தை காக்கவேண்டும்.

கல்வியோடு கூடிய ஏனைய துறைகளிலும் விற்பன்னர்களாக விளங்கி தமிழினதும் தமிழரதும் பெருமைகளைக் காக்கவேண்டும்.

உங்களுடைய சுபீட்சமான வாழ்விற்காக தங்களை ஆகுதியாக்கி மரணித்துபோன வீரர்களின் கனவுகள் மெய்ப்பட எம் பிள்ளைகள் சாதனைகளை எட்ட வேண்டும் எனவும் இதன்போது, தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் அயற்பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், சமூகமட்ட பிரதி நிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

SHARE