அரச சொத்துக்களை மோசடி செய்வதற்கு ஒரு போதும் துணை போகமாட்டேன் – அப்துல்லா மஹ்ரூப்

176

அரச சொத்துக்களை மோசடி செய்வதற்கு ஒரு போதும் துணை போகமாட்டேன் என பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா, அல் அதான் மஹா வித்தியாலயத்தில் நேற்று பொது மக்களுக்கான காணி உறுதி பத்திரம் வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

அதிகாரத்தில் இருக்கும் வரையான காலப் பகுயியில் மோசடிகளுக்கு இடம் கொடுக்க முடியாது.

கிண்ணியா – உப்பாறு பகுதியில் உள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு பிழையாக வர்த்தமானி அறிவித்தலும் செய்யப்பட்டுள்ளது.

உப்பாறு பகுதியில் உள்ள அரச காணிகள் பல்வேறு அபிவிருத்திகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

பல்கலைக்கழக கல்லூரி, தொழில் பேட்டைகள் உள்ளிட்ட பல அபிவிருத்தி பணிகளுக்காக மக்களுடைய தேவை கருதி திட்டங்களை சரிவர மேற்கொள்ளவுள்ளோம்.

ஏற்கனவே காணிகள் சூறையாடப்பட்டு தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நல்லாட்சி அரசில் வீடற்றவர்களுக்கு வீட்டு வசதி மற்றும் சகல காணிகளுக்குமான உறுதிப் பத்திரங்களும் வழங்கப்படவுள்ளன.

மத ஸ்தலங்கள் அரச பாடசாலைகள் உள்ளிட்ட காணிகளுக்கும் உறுதிப்பத்திரங்களை விரைவில் வழங்கவுள்ளோம்.

இன, மத பேதமற்ற முறையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் ஸ்ரீமெவன் டயஷ் எமக்காக தனது கடமைகளை அர்ப்பணிக்கவுள்ளார்.

காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு முழு மூச்சாய் நின்று செயற்படுவார் என நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

SHARE