ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மன்றங்கள் அனைத்துமே இலங்கைக்கு விரோதமானவை என்ற அபிப்பிராயம் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் கடந்த காலத்தில் பலமாகக் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
அதாவது புலிகளின் ஈழக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து சர்வதேச பொதுமன்றங்கள் அனைத்துமே இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக சிங்கள மக்களில் கணிசமானோர் இன்னும் கூட நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்காக அம்மக்களைக் குறை கூறுவதில் நியாயமில்லை. இலங்கையின் அரசியல்வாதிகளால் சிங்கள மக்கள் அவ்வாறுதான் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
முன்னொரு தடவை இலங்கை விவகாரத்தில் ஐ.நாவின் அறிவுறுத்தலுக்கமைய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்ட வேளையில், அவ்வறிக்கைக்கு எதிராக அன்றைய ஆட்சியின் போது ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
அறிக்கையைத் தயாரித்த தருஸ்மன் என்பவர் இலங்கையின் பிரதான சர்வதேச எதிரியாக அன்றைய அரசாங்கத்தால் உருவகிக்கப்பட்டிருந்தார். சிங்கள மக்கள் மத்தியிலுள்ள பாமர மக்கள் அரசாங்கம் கூறுவதை முழுதாக நம்பினார்கள்.
பாமர மக்கள் மாத்திரம் தருஸ்மனுக்கு எதிராக வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. அரசின் வற்புறுத்தலின் பேரில், அரசாங்க நிறுவன ஊழியர்களும் ஊடகவியலாளர்களும் கூட தருஸ்மனுக்கு எதிராக வீதியில் இறக்கப்பட்டது தான் வேடிக்கை.
இதன் தொடர்ச்சியாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகமாகப் பதவி வகித்த நவநீதம்பிள்ளைக்கு எதிராகவும் அமெரிக்காவைக் கண்டித்தும் இலங்கையில் ஏராளமான ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
பாமர மக்களைப் பொறுத்த வரை ஐ.நா, அமெரிக்கா போன்றவையெல்லாம் எவ்வாறென்பது புரியாத சங்கதிகள். அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியமும் அவர்களுக்குக் கிடையாது. ஐ.நாவுக்கும் அமெரிக்காவுக்கும் அன்றைய ஆட்சியின் போது மஹிந்த ராஜபக்ஷ இறுதி எச்சரிக்கை விடுத்ததைக் கூட அம்மக்கள் கைதட்டிப் பாராட்டியதை நாம் மறந்து விட முடியாது.
கடந்த சுமார் பதினொரு வருட காலமாக பெரும்பான்மையின மக்களில் கணிசமானோர் இவ்வாறுதான் அரசியல்வாதிகளால் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஐ.நாவின் முடிவைக் கண்டித்தும், முடிவை மாற்றுமாறு வலியுறுத்தியும் உலகின் குட்டித்தீவான இலங்கையின் ஓரிடத்தில் விமல் வீரவன்ஸ உண்ணாவிரதமிருந்தமையும் சிங்கள மக்களை தவறாக வழிநடத்துவதற்கான ஒரு நாடகமென்பதே புத்திஜீவிகளின் அன்றைய கருத்தாக இருந்தது.
எமது அரசியல்வாதிகளில் பலரின் பிழைப்பு இவ்வாறுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. மக்களை பாமரத்தனத்திலிருந்து மீட்டெடுப்பதற்கு அவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. பாமர மக்கள் மீதுதான் அவர்களது அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.
பத்து வருட காலம் இவ்வாறாக கற்பனை உலகில் வாழ்ந்த மக்களை கடந்த வருடம் ஜனவரியில் நடைபெற்ற ஆட்சிமாற்றமாவது மீட்டெடுக்குமென்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் தென்னிலங்கையில் பாமரத்தனம் இன்னும் நீங்கியபாடாக இல்லை.
அரசாங்கம் தனது இலக்கை நோக்கி ஒரு புறத்தில் சென்று கொண்டிருக்கையில், மறுபுறத்தில் மூன்றாம் தர அரசியல் வியாபாரம் நடந்து கொண்டேயிருக்கிறது. பெரும்பான்மையின மக்களை ‘அறியாமை’ என்ற இருளுக்குள் அமிழ்த்தி வைத்திருப்பதே இவர்களது நோக்கமென்பது தெளிவாகவே தெரிகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அல் -ஹுஸைன் இலங்கைக்கு வருகை தந்ததும், முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரும் அன்றைய பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்தொன்றைத் தெரிவித்திருந்தார்.
வெளிநாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர் தமிழர்களுக்காகவே மனித உரிமைகள் ஆணையாளர் செயற்படுவதாக கோத்தபாய கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவரது கருத்தில் புலிகளின் வகிபாகம் தெளிவாகக் குறிப்பிடப்படாத போதிலும், புலம்பெயர் அமைப்புகளென அவர் கூறுவது புலிகளை அடிப்படையாக வைத்துத்தான் என்பதில் சந்தேகமில்லை.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட போதிலும் ராஜபக்சக்களைப் பொறுத்த வரை புலிகளென்ற நாமத்தைக் கைவிடுவதற்கு அவர்கள் தயாராக இல்லை. புலிகளை வைத்தே சிங்கள மக்கள் மத்தியில் அவர்கள் அரசியலை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர் தமிழர்களை ஒட்டுமொத்தமாக புலிகளென்றே குறிப்பிட்டு வந்தவர்தான் கோத்தபாய ராஜபக்ஷ.
அவரது இப்போதைய கருத்தை முழுமையாக நம்புவதற்கோ அல்லது இனவாத உணர்ச்சி கொள்வதற்கோ தென்னிலங்கையில் மக்கள் கூட்டமொன்று இருக்கவே செய்கிறது.
சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கல்விமான்கள், புத்திஜீவிகள் போன்றோருக்கெல்லாம் அப்பாற்பட்ட ராஜபக்ச விசுவாசிகள் அவர்கள். தவறான வழிநடத்தலின் கீழ்தான் அத்தகையோர் இன்னமும் சென்று கொண்டிருக்கிறார்கள்.
அல்- ஹுசைன் என்பவர் ஒரு தனிமனிதர் அல்லர். உலகில் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்ற மிகப் பிரமாண்டமான சர்வதேசப் பொதுமன்றத்தின் ஒரு அமைப்பான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைப் பொறுப்பாளர் அவர்.
அல் -ஹுஸைனின் வருகை தனிப்பட்டதும் அல்ல. ஐ.நாவின் நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமையவே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அரச விரோத சக்திகளின் எதிர்ப்புகள் எவ்வாறாக இருந்த போதிலும் அல் -ஹுஸைன் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்ததுடன் பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்களையும் சந்தித்துள்ளார்.
ஐ.நா. தனது நிகழ்ச்சித் திட்டப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கையில், அரச விரோத சக்திகள் கூறுகின்ற அபத்தமான கருத்துகளால் ஆகப் போவது எதுவுமேயில்லை.