அலட்சியப்படுத்தக் கூடாத வலிகள் எவையெனத் தெரியுமா?

291

headache

வலிகள் என்பது ஏதாவது ஒரு உள்ளுறுப்பில் உண்டாகும் பாதிப்பினால் வரக் கூடிய அறிகுறிதான். வேலைப்பளு, நேரமின்மை என இந்த அவசர உலகத்தில் வலியை அலட்சியப்படுத்தி விடுகிறோம். ஆனால் பின்னாளில் இதன் விளைவுகளை சந்தித்தபின்தான் உறைக்கிறது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு. எந்த வலியையும் பொருட்படுத்தாமல் இருக்காதீர்கள். அது ஆபத்தானது.

தாங்க முடியாத, நீடிக்கும் தலைவலி:

தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம். வெறும் காய்ச்சல் ஜல தோசத்தாலும் தலை வலி வரும். ஆனால் மூளையில் இரத்தப்போக்கு,மூளைக் கட்டி போன்ற நோய்களாலும் ஏற்படலாம். காரணம் தெரியாத கடுமையான வலிக்கு உட்னே மருத்துவப் பரிசோதனை செய்து காரணம் தெரிந்து கொள்வது உயிர் காக்கும்.

நெஞ்சு, தொண்டை, தாடை வலி:

இதய நோயாளிகள் இதயத்தில் ஏதோ அழுத்துவது போல் உணர்வார்கள்.நெஞ்சைக் கையால் பிடித்துக் கொண்டே நெஞ்சைப் பிசைவது போல் உணர்வார்கள். ஒரு யானை நெஞ்சில் ஏறி உட்கார்ந்திருப்பதாக கூறுவார்கள். நெஞ்சு, தொண்டை, தாடை, இடது தோள்பட்டை இடது கை முழுவதும் தாங்க முடியாத வலி ஏற்படும். இதுபோல வந்தால் இதயநோயாக இருக்கலாம்.

கடுமையான வயிற்று வலி:

வயிற்றிலுள்ள குடல் வால் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு பாக்டீரியாக்கள் பெருகியிருக்கும்.அந்நிலையில் அதில் அழற்சி ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இது தான் அப்பெண்டிசிடிஸ் எனப்படுகிறது. மருத்துவரிடம் உடனே சென்று பரிசோதிக்க வேண்டும். இல்லையென்றால் இந்த குடல் வால் உடைந்து பாக்டீரியாக்கள் மற்ற உள் உறுப்புகளுக்கு பரவி விடும். மெலும் கணையம், இரைப்பை ஆகியவற்றில் குடல் புண்,குடலில் அடைப்பு போன்ற பிற ஆபத்தான காரணங்களாலும் வயிற்று வலி வரலாம்.

கெண்டைக்கால் வலி:

கெண்டைக்கால் பகுதியில் சில வேளை இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பபடுத்தும். ஆபத்தானது. இது போன்ற உறைந்த இரத்தத் துணுக்குகள் நுரையீரலில் கடும் பாதிப்பு ஏற்படுத்தலாம்.

கால் அல்லது பாதங்களில் எரிச்சல் வலி:

கால் அல்லது பாதங்களில் நரம்புகள் பழுதடைந்தால் ஊசி குத்துவது போல் வலிஏற்படும். இது சர்க்கரை நோயின் அடையாளமாக இருக்கலாம்.

என்னெவென்று சொல்ல முடியாத வலி:

சிலருக்கு மனச்சோர்வு காரணமாக உடலின் பல இடங்களில் சொல்ல முடியாத கடுமையான வலி உணர்வார்கள். கழுத்து வலிக்கிறது ,கை வலிக்கிறது, வயிறு வலிக்கிறது என மருத்துவரிடம் போவார்கள் ஆனால் மருத்துவர் சோதனை செய்து பார்த்தால் எதுவும் கண்டு பிடிக்க முடியாது எல்லாம் நார்மல் என்று சொல்வார்கள்.

கடும் மன உளைச்சலும் மனச்சோர்வும் இத்தகைய வலிக்கு காரணமாக இருக்கலாம். உரிய நேரத்தில் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் வாழ்க்கையில் வெறுப்பு சலிப்பு உண்டாகும். அது மூளையையும் பாதித்து விடும். தூக்கமின்மை, நரம்பு பிரச்சனை ஆகியவற்றை தந்துவிடும். ஆகவே உடனடியாக அதற்கான தீர்வு காண முற்படுங்கள்.

 

SHARE