அவண்ட் கார்ட் கடல்வழித்தட பாதுகாப்பு வர்த்தகம் தொடர்பாக லஞ்சம் கொடுத்தவர்கள் மற்றும் வாங்கியவர்கள் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளிவரும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அவண்ட் கார்ட் கடல்வழித்தட பாதுகாப்பு வர்த்தக நிறுவனம் தொடர்பாக லங்காதீப இணையத்தளத்துக்கு கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவண்ட் கார்ட் நிறுவனத்துக்கு நாளொன்றுக்கு மூன்று கோடிக்கும் அதிகமான வருமானம் கிடைத்து வந்தது. தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக இந்த வருமானத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவண்ட் கார்ட் நிறுவனத்தினர் வெறிபிடித்தவர்கள் போன்று ஊடக நிறுவனங்களுக்கு அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவண்ட் கார்ட் நிறுவனத்திடமிருந்து லஞ்சம் வாங்கியதாக என்மீதும் குற்றம் சுமத்துகின்றார்கள். ஆனால் அது குறித்து நான் மற்றும் அமைச்சர்களான சம்பிக ரணவக, அர்ஜுன ரணதுங்க போன்றோரும் பொலிஸ் மா அதிபரிடம் விரிவான விசாரணைக்கு உத்தரவிடுமாறு முறைப்பாடு செய்துள்ளோம்.
விசாரணை முடிவில் லஞ்சம் கொடுத்தோர் மற்றும் வாங்கியோர் தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.