அவர்கள் காவடி எடுக்கிறார்கள்…!!
ஒற்றைக் கால்களுடனும், ஒற்றைக் கைகளுடனும்
தூக்குக் காவடி எடுக்கிறார்கள்..
அது கடவுளுக்காகத்தானிருக்க வேண்டும்.
நேர்த்திக்கடனாக இருக்குமோ..?
இல்லை நன்றிக்கடனாக இருக்குமோ..?
தெரியாது..!!
அவர்கள் எதனை அப்படி வேண்டியிருந்திருப்பார்கள்?
இரத்தவெள்ளத்தில் இடிபாட்டுக்குள் இறக்கும் தறுவாயில்…
யாராவது வந்து தூக்கி கிடத்தவென நேர்ந்திருக்கலாம்…
இறுதி மூச்சை பிடித்தபடி.
அறுந்துபோன அங்கங்கள் வலிக்கும்போது,
மீதி அங்கங்கள் சிதையாமலிருக்க ஏதும் நேர்த்திவைத்திருந்திருக்கலாம். .
அல்லது அதற்கு முன்னரே காயமேதும் படாமல்
கவனமாய் இருக்கவாயுமிருக்கலாம்.
ஒருவேளை…
எஞ்சியிருக்கின்ற அவையங்களுக்கும்,
மிஞ்சிக்கிடக்கின்ற பாதி உயிருக்கும் பரிகாரமாயுமிருக்கலாம்.
அல்லது
செத்துப்போனவர்களுக்கும் சேர்த்து இன்னமும் இந்த
“இத்துப்போன ஏமாளிகள்” கடவுளை நம்பி
வலிசுமக்கலாம்.
அல்லது..
தம்மை சுமந்தவனின் தடயத்தை தொலைத்துவிட்டு,
வாணாள் முழுதும் வலிசுமக்கும் பேதைகளின்
வலியுணர்த்த வேண்டியுமிருக்கலாம்…
அவர்கள் காவடி எடுக்கிறார்கள்…
விடுமுறையில் வந்தவரின்
காசுகள் கற்பூரச்சட்டிக்குள் எரிந்தன..
அடிச்ச ஆட்டினதும், குடிச்ச மதுவினதும்
பாவங்கள் உண்டியலுக்குள் செருகப்பட்டன.
வாய்கள் பிளந்தன…
“கமராக்கள்” திறந்தன..
காட்சிகள் புகைப்படங்களாகின..
அப்படியே பறந்தும்விட்டன…
வலிசுமந்தோர் தொடர்ந்தும் வலியேசுமக்கவென
சபிக்கப் பட்டனர் கடவுளால்…
அப்போதுதான் அடுத்த ஆவணியும் வரும்
கடவுளுக்கு காவடியும் வரும் அதைக்காண
விடுமுறையும் வரும்.