அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது பயிற்சிப் போட்டி: 249 ஓட்டங்களில் சுருண்டது இந்தியா

353

 

அவுஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான 2வது பயிற்சிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 249 ஓட்டங்கள் எடுத்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் எதிர்வரும் 12ம் திகதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

நேற்று நடந்த
முதல் டி20 பயிற்சிப் போட்டியில் கோஹ்லி, தவான் அதிரடியில் இந்தியா 74 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் 50 ஓவர்கள் கொண்ட 2வது பயிற்சிப் போட்டி இன்று நடக்கிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர் தவான் (4), கோஹ்லி (7) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து ஜோடி சேர்ந்த ரஹானே, ரோஹித் சர்மா நிதானமாக விளையாடினர்

மறுமுனையில் ஆடி வந்த ரஹானே 41 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, குர்கீரட் சிங் 6 ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

இந்த நிலையில் ரோஹித் அரைசதம் கடந்தார். அவர் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 67 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் டோனி (15) நிலைக்கவில்லை. பின்னர் களமிறங்கிய மணீஷ் பாண்டே (58) அரைசதம் கடந்து நம்பிக்கை அளித்தார்.

ஜடேஜா தன் பங்கிற்கு  26 ஓட்டங்கள் எடுத்தார். ரிஷி தவான் (0), அஸ்வின் (4) நிலைக்கவில்லை.

இதனால் இந்தியா 49.1 ஓவர்களில் 249 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அக்சர் (8) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய பொர்டர் 5, முர்ஹெட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

SHARE