கடந்த வருடம் நியூஸிலாந்துக்கு படகு மூலம் சென்ற இலங்கை அகதிகளை வழிமறித்த அவுஸ்திரேலிய கடற்படையினர், அவர்களை ஏற்றிவந்த கடத்தல்காரர்களுக்கு லஞ்சம் வழங்கியமை மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நியூஸிலாந்தின் செய்தி இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
வன் நியூஷ் நௌ என்ற இணையத்தளத்தின் தகவல்படி, குறித்த படகில் இருந்து கைதுசெய்யப்பட்டு தற்போது இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடம் இருந்து கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த செய்தி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தம்மை மீண்டும் திரும்பி செல்லுமாறு பணித்த அவுஸ்திரேலிய கடற்படையினர், போய் சாகுமாறும் எச்சரித்ததாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் குறித்த செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் நியூஸிலாந்தில் புகலிடக்கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், அதற்கு சிறிது காலம் எடுக்கலாம் என குறித்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.