அஷ்வின், ஜடேஜாவின் ‘ஓய்வு’ தற்காலிகமா… நிரந்தரமா?

152

ஒருநாள்

சாம்பியன்ஸ் டிராஃபிக்குப் பின், இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் M.S.K.பிரசாத், இந்திய அணியின் தேர்வுமுறைகள் குறித்துப் பேசியிருந்தார். 2019 உலகக்கோப்பையைக் குறிவைத்தே ஒவ்வொரு தொடருக்கான அணியும் தேர்வு செய்யப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். பயிற்சியாளர் கும்ப்ளேவின் இடத்தை ரவி சாஸ்திரி நிரப்பியதும், ‘மிஷன் 2019’-ஐ ஸ்டார்ட் செய்தது கோலி – சாஸ்திரி கூட்டணி. “எப்பேர்ப்பட்ட ஆளா வேணாலும் இருக்கட்டும். ஃபிட்னெஸ் இருந்தாதான் டீம்ல இருக்க முடியும்” என்பதுதான் கோலியின் மிகப்பெரிய கண்டிஷன். இந்தக் கண்டிஷன் அவருக்கும் பொருந்தும். அதனால்தான் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்குத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால், அது பெரிய அளவில் கேள்வி எழுப்பப்படவில்லை. அஷ்வினும், ஜட்டுவும் தேர்வாகாதது கிரிக்கெட் ரசிகர்களைப் புருவம் உயர்த்தவைத்துள்ளது.

கோலியின் ஸ்பெஷல் பிளான்

இந்திய அணி வெறும் உலகக்கோப்பையை மட்டும் டார்கெட்டாக வைத்துச் செயல்படவில்லை. எப்படி 1990-களின் பிற்பகுதியிலிருந்து ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியதோ, அதுபோன்று ஒரு அசைக்க முடியாத இமேஜை இந்திய அணிக்கு ஏற்படுத்தியாக வேண்டும் என்று செயல்பட்டுவருகின்றனர். அதற்கு கோலி வகுத்த திட்டம், Unique teams. ஒவ்வொரு வகையான போட்டிகளுக்கும், ஒவ்வொரு கேப்டன் வைத்து சில அணிகள் செயல்படும். ஆனால், கோலி ஒவ்வொரு ஃபார்மட்டுக்கும் தனி அணி அமைப்பதில் தீர்க்கமாக இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளுக்கு என்று ஸ்பெஷலிஸ்டுகள் உள்ளடக்கிய ஒரு அணி. ஷார்டர் ஃபார்மட்டில் அதற்கேற்ப  விளையாடும் அணி. கோலியின் இந்தப் பிளான்தான் அஷ்வினையும், ஜடேஜாவையும் வெளியே அமர்த்தியிருக்கிறது.

அஷ்வின்

விராட் சில விஷயங்களில் மிகத் தெளிவு. “எந்த வீரராக இருந்தாலும், அந்த ஃபார்மட்டுக்கு ஏற்ப விளையாட வேண்டும். சில வீரர்கள் ஃபார்மட் மாறும்போது அதற்கேற்ப தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் தொடங்கும் முன் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியிருந்தார். ஒவ்வொரு ஃபார்மட்டுக்கும் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் இருக்கும்பட்சத்தில், ஆட்டத்தின் போக்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பது அவரது கருத்து. அதுதான் ஃபார்மில் இல்லாத காலங்களிலும், ரஹானேவைக் காட்டிலும் தவானுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்புகள் கிடைக்கக் காரணம். ‘டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டா’ன ரஹானே, ஒருநாள் போட்டியிலும் தன் ஸ்லோ கேமை ஆடுவது கோலிக்குப் பிடிக்கவில்லை. ஸோ… அவரது டீஃபால்ட் சாய்ஸ் எல்லாத் தொடர்களிலும் தவானாகவே இருந்தது.

இப்படி பிளான் செய்துதான் இரு வேறு அணிகளை ‘டிசைன்’ செய்தார் விராட். டெஸ்டுக்கு ஓப்பனர்களாக, விஜய் – ராகுல். ஒருநாள் போட்டிகளுக்கு தவான் – ரோஹித். மிடில் ஆர்டருக்கு புஜாரா, ரஹானே. அங்கு ஜாதவ், மனீஷ். கீப்பிங்குக்கு சஹாவும், தோனியும். ஸ்பின் ஆப்ஷன்களாக, அஷ்வின் ஜடேஜா. ஒருநாள் போட்டிகளுக்கு அக்சர், சாஹல், குல்தீப் கூட்டணி. உமேஷும், இசாந்தும் டெஸ்ட் பவுலர்கள், புவியும், பூம்ராவும் ODI ஸ்பெஷலிஸ்ட் என வகுத்துவிட்டார் கோலி. பாண்டியா மட்டும் அவருக்கு அனைத்து ஃபார்மட்டிலும் தேவை. அவரைப் பொறுத்தமட்டில் 3 ஃபார்மட்டிலும், அந்த போட்டியின் தன்மையைப் பொறுத்து ஆடக்கூடிய ஒரே ஆள் அவர் மட்டுமே. அதனால், அவரையும் பாண்டியாவையும் தவிர்த்து மற்ற 9 வீரர்களும் வேறுபடுவார்கள்.

ஜடேஜா

சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலை வென்று, தன் முதல் கோப்பையைத் தூக்க முடியாததால், அடுத்தகட்ட பாய்ச்சலை புலிப்பாய்ச்சலாக  மாற்ற  விரும்புகிறார் கோலி. ஒருநாள் போட்டிகளில் டெஸ்ட் போல் ஆடும் வீரரோ, டெஸ்ட் போட்டிகளில், ‘கன்சிஸ்டன்சி’ இல்லாத வீரரோ அவருக்கு வேண்டியதில்லை. பெர்ஃபார்ம் பண்ணலையா உடனே தூக்கிடு. கோலியின் இந்த அணுகுமுறைதான் அஷ்வினுக்கும், ஜடேஜாவுக்கும் தரப்பட்ட ஓய்வின் பின்னனி.

அஷ்வின், ஜடேஜா ODI பெர்ஃபாமன்ஸ் எப்படி?

அஷ்வினும், ஜடேஜாவும் டெஸ்ட் போட்டிகளில் ரவுண்டு கட்டி அடித்தாலும், ஒருநாள் போட்டிகளில் அவர்களது பந்துவீச்சு எடுபடவில்லை. இந்தியத் துணைக் கண்டத்தைத் தாண்டி, அவர்களது செயல்பாடு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ரன் குவிப்பைத் தடுக்கத் தவறியது மட்டுமின்றி, விக்கெட் வீழ்த்தவும் இருவரும் தவறிவிட்டனர். சமீப காலங்களில், அவர்களின் செயல்பாடுகளே அவர்களுக்கான இடத்தைப் பறித்தது.

“இலங்கை தொடருக்கு ஓய்வுன்னு சொன்னாங்க.. இன்னுமா ரெஸ்ட் எடுக்குறாங்க…?” என்று ரசிகர்களுக்கு டவுட்! இந்தச் சந்தேகம் நியாயமானதே. டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த பெளலர்களில் இருவருக்கு, ஒருநாள் போட்டி அணியில் இடமில்லை எனும்போது, அதுவும் தொடர்ந்து 3 தொடர்களில் எனும்போது சந்தேகம் எழுவது சகஜமே. உண்மையில் இது ஓய்வுதானா? இல்லை, இளம் இந்திய அணியை உருவாக்கும் முயற்சியில்  கழட்டிவிடப்பட்டார்களா? 2016-ம் ஆண்டு நடந்த இந்தியா – நியூசிலாந்து தொடருக்குப் பிறகான பெர்ஃபாமன்ஸ்களை வைத்து, ஒரு பார்வை…..

SHARE