
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் தயிர்வாடிப் பகுதியில் மோட்டார் சைக்கிள் நாய் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இன்று (29) காலை தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தோப்பூர் பகுதியைச் சேர்ந்த அசனார்லெப்பை புஹாரி என்ற ஆசிரியரே இவ்வாறு காயமடைந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிரியர் தோப்பூரிலிருந்து ஆஸாத் நகர் அல்பலாஹ் வித்தியாலயத்திற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மேலும், மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு ஆசிரியர் மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இன்று (29) காலை வேளை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்தருகில், மீன் ஏற்றி வந்த சிறியரக லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த (29 வயது) நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.