ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிராக வவுனியா மகாவித்தியாலய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடபட்டுள்ளனர்.
இது பற்றி தெரியவருவதாவது,
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஒழுக்காற்றுக்குழு ஆசிரியர் வடமாகாண கல்வி அமைச்சரின் செயலாளரின் மகனின் முறைகேடான சீருடையை அணிந்து வந்ததை கண்டித்ததை அடுத்தே இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து இன்று பாடசாலை மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தப்பட்டு வருகின்றது. இதில் செயலாளரே அதிகார துஸ்பிரயோகத்தை நிறுத்து, கண்டிப்பான ஆசிரியர்களின் கைகளை கட்டாதே, ஆசிரியர் இடமாற்றத்தை இரத்து செய், முறைகேடான இடமாற்றத்திற்கு முறையான தீர்வு வேண்டும் போன்ற பல்வேறு பதாதைகளை ஏந்தி தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்த மாணவன் ஒருவன் எம்மை நல்வழிபடுத்தி ஒழுக்கசீலராக மாற்றிய எமது ஆசானுக்கு கிடைத்த தண்டனை இது, வடமாகாண கல்வி அமைச்சரே பக்கசார்பின்றி எமது ஆசிரியரை எமது பாடசாலைக்கு மீண்டும் பெற்றுத்தரும் வரை இவ் கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
காலை 08.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி தற்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.