கடந்த வருடம் ஆசிரியை ஒருவரை மாகாண சபை அமைச்சர் ஒருவர் முழங்காலிட வைத்த சம்பவமானது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டதோடு ஆசிரிய சமூகத்தையே அவமானப்படுத்திய சம்பவமாக கருதப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது எதிர்ப்பினை தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரான முன்னாள் மாகாண சபை அமைச்சரான ஆனந்த சரத்குமாரவிற்கு குறித்த ஆசிரியை கற்பிக்கும் பாடசாலையிலேயே பலத்த வரவேற்பு நேற்றைய தினம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவகத்தேகம நவோதய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்கு தலைமை விருந்தினராக அந்தப் பாடசாலையின் அதிபர் மற்றும் அலுவலகர்களால் குறித்த நபர் அழைக்கப்பட்டதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் குறித்த மாகாணசபை அமைச்சருக்கு வாத்திய இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு மாணவர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு பலத்த வரவேற்பளிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிகழ்விற்கு வேறெந்த அரசியல்வாதியோ,பாடசாலை மட்ட உயர் அதிகாரிகளோ வருகை தரவில்லையென்றும் வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மூன்று அதிபர்கள் மாத்திரமே இந்த நிகழ்விற்கு வருகை தந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.